சென்னை துறைமுகத்தை 12 மணிநேரம் ஸ்தம்பிக்க வைத்த ஸ்ட்ரைக்!
சென்னை: சென்னை துறைமுக ஊழியர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தத்தால் இரும்புத் தாது பிரிவு முழுமையாக ஸ்தம்பித்தது.
சமீபத்தில் சென்னை துறைமுக பொறுப்புக் கழகம் பெர்த் பிரிவில் பணியாற்றிய 160 பணியாளர்களை மொத்தமாக வேறு பிரிவுகளுக்கு மாற்றியது.
இது துறைமுக ஊழியர்களின் கோபத்தைக் கிளறிவிட்டது.
எனவே திங்கள் கிழமை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவித்தனர். இதைத்தொடர்ந்து இரும்புத் தாது பெர்த்தில் முழுமாயாக பணிகள் பாதிக்கப்பட்டன.
இந்தப் பிரிவில் மட்டும் மாதத்துக்கு 5 லட்சம் டன் இரும்புத்தாது கையாளப்படுகிறது. எட்டு கப்பல்கள் மற்றும் 58 வேகன்களை கையாளுகிறது. ஆந்திரா, க்ர்நாடகப் பகுதிகளின் இரும்புத் தாது இங்குதான் வரும், ஏற்றுமதிக்காக.
இந்நிலையில் நேற்று காலை 6 மணிக்கு ஸ்ட்ரைக் தொடங்கியது. இரும்புத்தாது பெர்த் என்றில்லாமல், எண்ணெய் பெர்த் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் பணியிலிருந்தவர்கள் இந்த வேலை நிறுத்தத்துக்கு ஆதரவளித்தனர்.
நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த துறைமுக நிர்வாகம், உடனடியாக அனைத்து மாறுதல் உத்தரவையும் ரத்து செய்தது. எனவே 12 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு மீண்டும் பணிகள் தொடங்கின.
இந்த வேலை நிறுத்தத்தால் தேங்கி நின்ற தாதுப் பொருள்கள் விரைவில் சரிசெய்துவிடுவோம் என தொழிலாளர்கள் உறுதியளித்தனர்.