திமுக சட்ட மன்ற உறுப்பினர் பெரியண்ணன் உடல் அடக்கம்
தர்மபுரி: பென்னாகரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ மற்றும் தருமபுரி வடக்கு மாவட்ட திமுக செயலாளரான பெரியண்ணன் உடல் இன்று அடக்கம் செய்யப்பட்டது.
பென்னாகரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ - வாக இருந்தவர் பெரியண்ணன் (54). இவர் தருமபுரி வடக்கு மாவட்ட திமுக செயலாளராகவும் பணியாற்றி வந்தார்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார் பெரியண்ணன். சிகிச்சை எடுத்து வந்த நிலையில் உடல் நலம் மோசமடைந்தது. இதனையடுத்து சென்னையில் ஒரு பிரபல தனியார் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பெரியண்ணன் இறந்தார்.
அவருக்கு முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் ஸ்டாலின், கனிமொழி மற்றும் அமைச்சர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் அவரது உடல் சொந்த ஊரான தருமபுரிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பொதுமக்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் இறுதிச் சடங்குகள் தொடங்கின. இறுதி ஊர்வலத்தில், அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், வீரபாண்டி ஆறுமுகம் உட்பட திமுக கட்சியின் முக்கிய பிரமுகர்கள், பாமக தலைவர் ஜி.கே.மணி மற்றும் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். பின்பு அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.
இறந்து போன பெரியண்ணனுக்கு ஒரு மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர்.