இடைத் தேர்தல்-வேட்பு மனுத் தாக்கல் முடிந்தது
திருச்செந்தூர், வந்தவாசி சட்டசபை தொகுதிகளில், வருகிற 19ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 25ம் தேதி தொடங்கியது.
நேற்று வரை திருச்செந்தூர் தொகுதியில், திமுக சார்பில் அனிதா ராதாகிருஷ்ணன், அதிமுக சார்பில் அம்மன் நாராயணன், தேமுதிக கோமதி கணேசன் உள்பட 19 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர்.
அதேபோல வந்தவாசியில், திமுக சார்பில் ஜெ.கமலக்கண்ணன், அதிமுக சார்பில் முனுசாமி, தேமுதிக சார்பில் ஜனார்த்தனன் உள்பட 12 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இன்றுடன் இங்கு வேட்பு மனுத் தாக்கல் முடிவடைந்தது. இன்று சில சுயேச்சைகள் மனுத் தாக்கல் செய்தனர்.
வேட்பு மனுக்கள் நாளை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன. அதன் பின்னர் டிசம்பர் 5ம் தேதிக்குள் மனுக்களை வாபஸ் பெற விரும்புவோர் பெறலாம்.
அன்று மாலை வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கப்பட்டு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
காப்பீட்டு திட்டம் தொடரலாம்-குப்தா:
இந் நிலையில் நிருபர்களிடம் பேசிய தலைமைத் தேர்தல் ஆணையர் நரேஷ் குப்தா,
திருச்செந்தூர் மற்றும் வந்தவாசி தொகுதிகளில் கலைஞர் காப்பீட்டுத் திட்டம் தொடரலாம். அத்தியாவசிய சிகிச்சைகளுக்கு இத் திட்டத்தை பயன்படுத்தலாம்.
பால்காரர்-மகளிர் குழுக்கள் கண்காணிப்பு:
பால்காரர், நாளிதழ் வினியோகிப்பாளர்கள் மூலம் பண பட்டுவாடா நடப்பதாக புகார்கள் வருவதால் அதைத் தடு்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்ள் கண்காணிக்கப்படுவர். அதே போல மகளி்ர் சுய உதவிக் குழுக்களும் கண்காணிக்கப்படுவர் என்றார்.
முன்னதாக இடைத்தேர்தல் முடியும் வரை திருச்செந்தூர், வந்தவாசி தொகுதிகள் அடங்கிய இரண்டு மாவட்டங்களில், நலத் திட்ட உதவிகள் மட்டுமின்றி, கலைஞர் மருத்துவ காப்பீட்டு திட்டப் பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.
இந்தத் தொகுதிகள் அடங்கிய திருவண்ணாமலை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில், தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால், இலவச 'கலர் டிவி' கொடுப்பது, இலவச வேட்டி, சேலைகள் கொடுப்பது போன்ற நலத்திட்டங்களை செயல்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் அரசின் சமீபத்திய திட்டமான கலைஞர் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்திற்கான புகைப்படம் எடுத்தல், அடையாள அட்டை வழங்குதல் போன்ற பணிகளையும் இந்த இரண்டு மாவட்டங்களில் மேற்கொள்ளக்கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.
தேர்தல் ஆணையத்திடம் திமுக மனு:
இதையடுத்து மருத்துவ காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்த அனுமதி கேட்டு, திமுக சார்பில் டி.ஆர்.பாலு தலைமையில் தேர்தல் கமிஷனிடம் டெல்லியில் மனு அளி்க்கப்பட்டுள்ளது.
ஏழை மக்கள் சிறப்பான மருத்துவ சிகிச்சையை பெற வழிவகுக்கும் கலைஞர் காப்பீ்ட்டு திட்டத்தை முடக்கக்கூடாது. கவர்னரால் அறிவிக்கப்பட்ட உயிர் காக்கும் மருத்துவ திட்டமான இதன் நடவடிக்கைகளுக்கு தடங்கல் ஏற்படுத்துவது சரியாகாது என திமுக மனுவில் குறிப்பிட்டிருந்தது.
இந் நிலையில் இன்று நிருபர்களிடம் பேசிய நரேஷ் குப்தா, மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் ஏற்கனவே பெயர் சேர்த்திருந்தால், அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கோ, அதன் பலன்களை பெறுவதற்கோ எவ்வித தடையும் இல்லை. அதே நேரத்தில் இத் திட்டத்தில் புதிதாக பெயர்களை சேர்க்கக் கூடாது என்ற தடை அமலில் இருக்கும் என்றார்.