மீண்டும் அதிமுகவில் இணைந்த இன்பத்தமிழன்
ஜெயலலிதாவை அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்த இன்பத்தமிழில் அதிமுகவில் சேர்ந்தார்.
கடந்த 2001ம் ஆண்டு தேர்தலில் அதிமுக சார்பில், ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி எம்எல்ஏவான இன்பத்தமிழன் அமைச்சரானார். அந்தத் தேர்தலில் தாமரைக்கனிக்கு எதிராக இவரை களமிறக்கினார் ஜெயலலிதா.
ஆனால், வழக்கம்போல் இவரையும் ஜெயலலிதா ஒதுக்கவே கடந்த 2006ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலுக்கு பின், திமுகவில் இணைந்தார்.
கடந்த மூன்று ஆண்டுகளாக திமுகவில் இருந்து வந்த அவர் நேற்று ஜெயலலிதாவை சந்தித்து அதிமுகவில் இணைந்தார்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர்,
அறியாமையால், சிறுபிள்ளைத்தனமாக திமுகவில் இணைந்ததற்காக வேதனைப்படுகிறேன். நான் திமுகவில் இணையச் சென்றபோது, " உன் அப்பாவின் இறப்புக்கு போகக்கூடாது என ஜெயலலிதா உத்தரவிட்டார்'' என்று சொல்லுமாறு அவர்கள் தெரிவித்தனர்.
அவர்கள் சொன்ன பொய்யை நானும் சொன்னேன்.ஆனால், உண்மையில் எனது அப்பா மறைவின்போது, இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளச் சொல்லி ஜெயலலிதா அனுப்பி வைத்தார்.
இதை மறைத்து, பொய் சொல்லிவிட்டோமே என, கடந்த மூன்றாண்டு காலமாக, மன வேதனையில் இருந்து வந்தேன் (அடடா...).
நான் செய்த தவறுகளை மன்னித்து, என்னை புரட்சித் தலைவி அம்மா அவர்கள் தாயுள்ளதோடு மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொண்டுள்ளார் என்றார்.
திருச்செந்தூர் தொகுதியில் இடைத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் அப் பகுதியில் நாடார் சமூக வாக்குகளைக் கவர்வதில் இன்பத்தமிழன் உதவுவார் என்று ஜெயலலிதா கருதுவதாகத் தெரிகிறது. இதனாலேயே அவரை கட்சிக்குள் இழுத்துள்ளனர் என்கின்றனர் திமுகவினர்.
இந் நிலையில் அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
ஜெயலலிதாவை அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் இந்திய தேசிய லீக் கட்சியின் மாநிலத் தலைவர் எஸ்.ஜெ.இனாயத்துல்லா நேரில் சந்தித்து வந்தவாசி, திருச்செந்தூர் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களில், அதிமுகவுக்கு தங்களது கட்சியின் முழு ஆதரவைத் தெரிவித்துக் கொண்டார்.
அதற்கு ஜெயலலிதா தமது நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் இந்திய தேசிய லீக் கட்சியின் துணைத் தலைவர் எம்.முனிருதீன் ஷெரீப், மாநில பொதுச் செயலாளர் ஒய்.ஜாகீருதீன் அகமது, துணைத் தலைவர் நாகூர் ராஜா, பொருளாளர் முகமத் ரகமத்துல்லா, அமைப்பு செயலாளர் நாகை உசேன் ஆகியோர் உடனிருந்தனர் என்று கூறப்பட்டுள்ளது.