நாடாளும் மக்கள் கட்சிக்கு முக்கிய நிர்வாகிகள் முழுக்கு - கார்த்திக் அதிர்ச்சி
நடிகர் கார்த்திக் கடந்த 2005 மே மாதம் சரணாலயம் என்ற சமூகசேவை அமைப்பை ராஜபாளையத்தில் துவங்கினார். இதனையடுத்து , 2006 -ல் ஃபார்வர்ட் பிளாக் கட்சியில் இணைந்து தமிழக தலைவர் பதவியை பெற்று அரசியல் பிரவேசம் கண்டார்.
ஆனால், கார்த்திக்கும் - கட்சித் தலைமைக்கும் இடையே நீண்ட விரிசல் விழுந்தது. இதனையடுத்து, நிர்வாகிகள் குழு கூட்டத்தை கூட்டவில்லை என்று குற்றம் சாட்டி ஃபார்வர்ட் பிளாக் கட்சியில் இருந்து கார்த்திக் அதிரடியாக நீக்கப்பட்டார்.
இதனால், கார்த்திக் 2008 ஜூன் 9 ம் தேதி அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி என்ற புதுக் கட்சியைத் துவங்கி, கடந்த லோக்சபா தேர்தலில் பா.ஜ.க.- வுடன் கூட்டணி அமைத்து விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டார். தேனியில் ஒரு வேட்பாளரை நிறுத்தினார்.
இந்த இரண்டு பேருமே சொற்ப வாக்குகளைப் பெற்று டெபாசிட்டை இழந்தனர். பின்னர் தேனி வேட்பாளர் கட்சியை விட்டு போய் விட்டார்.
இந்த நிலையில், அக் கட்சியின் முக்கிய மாவட்டச் செயலாளர்கள் சிலர் விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து ஈரோடு மாவட்ட செயலாளர் மாதேஸ்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
நாங்கள் கட்சிக்கு வந்தவுடன் பணம் சம்பாதிக்க விரும்புவதாக கார்த்திக் கூறுகிறார். ஆனால், நாங்கள் கட்சிக்கான சொந்தப் பணம் பல லட்சத்தை செலவு செய்துவிட்டோம். இதனால் குடும்பத்தில் கூட நல்ல பெயரை வாங்க முடியவில்லை. அவப் பெயர் தான் கிடைத்து.
கார்த்திக் எங்களை பலமுறை சென்னைக்கு வருமாறு அழைத்து விட்டு, சந்திக்காமல் புறக்கணித்து விட்டார். அவரை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை.
எனவே, நாடாளும் மக்கள் கட்சி - யின் முக்கிய மாவட்ட செயலாளர்கள் துணையுடன் அடுத்த வாரம் தனிகட்சி துவங்க உள்ளோம் என்றார்.
இந்த செய்தியால் நடிகரும், கட்சி தலைவருமான கார்த்திக் அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.