நிபந்தனை-தளர்த்தக் கோரும் என்கேகேபி ராஜா
ஈரோடு : தனக்கு விதிக்கப்பட்ட ஜாமீன் நிபந்தனையை தளர்த்தக் கோரி என்கேகேபி ராஜா ஈரோடு செஷன்ஸ் கோர்ட்டில் மனு செய்துள்ளனர்.
முன்னாள் திமுக அமைச்சரான என்கேகேபி ராஜா, பெருந்துறையைச் சேர்ந்த சிவபாலன் என்பவரை தனது வீட்டுக்கு வரவழைத்து சரமாரியாக தாக்கியதாக புகார் எழுந்தது.
இந்த தாக்குதலில் ராஜாவின் 2வது மனைவி உமா மகேஸ்வரி, உதவியாளர் காஞ்சி குமார் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பதாக புகார் தரப்பட்டது.
இதன் பேரில் அவர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடி போலீஸாருக்கு மாற்றப்பட்டது.
வழக்கில் காஞ்சிகுமார் உள்ளிட்ட ஐந்து பேர் முதலில் கைது செய்யப்பட்டனர். பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி. ராஜாவும், அவரது 2வது மனைவி உமா மகேஸ்வரியும் முன் ஜாமீன் கேட்டு ஈரோடு செசன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.
அங்கு அவர்களுக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கப்பட்டது. இதையடுத்து இருவரும் பெருந்துறை கோர்ட்டில் சரணடைந்தனர். அங்கு அவர்களுக்கு ஜாமீன் அளிக்கப்பட்டது.
ராஜாவும், உமாமகேஸ்வரியும் ராமநாதபுரத்தில் தங்கியிருந்து அங்குள்ள மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மறு உத்தரவு வரும் வரை தினசரி கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது.
அதன்படி இருவரும் கையெழுத்துப் போட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் உமா மகேஸ்வரிக்கு நிபந்தனை தளர்த்தப்பட்டது. அதன்படி தற்போது அவர் பெருந்துறை கோர்ட்டில் தினசரி கையெழுத்து போட்டு வருகிறார்.
இந்த நிலையில், என்.கே. கே.பி.ராஜாவும் நிபந்தனையை தளர்த்தக்கோரி ஈரோடு செசன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை நாளை நடைபெறுகிறது.