உலகின் மூன்றில் ஒரு பகுதி பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்படும் - உலக சுகாதார நிறுவனம்
2வது கட்ட பன்றிக் காய்ச்சலுக்காக உலகமே பரபரப்புடன் காத்துள்ளது. இருப்பினும் அது தொடங்கி விட்டதா என்பது இதுவரை எங்கும் உறுதி செய்யப்படவில்லை. ஆனால் தலைநகர் டெல்லியில் பன்றிக் காய்ச்சல் பரவல் அதிகரித்து வருவது கவலையளிப்பதாக உள்ளது.
டெல்லியில் திங்கள்கிழமை புதிதாக 78 பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து டாக்டர் சபத்னேகர் என்பவர் கூறுகையில், பன்றிக் காய்ச்சல் குளிர்காலத்தில் வேகமாக பரவும். குளிர்காலத்தில் மனிதர்களுக்கு ரத்த ஓட்டம் மிகவும் குறைவாக இருக்கும். வெப்பத்தன்மையைப் பாதுகாக்க ரத்த நாளங்கள் மூடிக் கொள்வதால் இந்த நிலை. இது வைரஸ்களுக்கு பெரும் சாதகமாகி விடுகிறது. இதனால்தான் குளிர்காலத்தில் வைரஸ் தாக்கம் அதிகமாக இருக்கும் என்றார்.
டெல்லியில் தற்போது குளிர் வாட்ட ஆரம்பித்துள்ளது. இதனால்தான் அங்கு பன்றிக் காய்ச்சல் பரவல் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.
அதேபோல ஐரோப்பிய நாடுகளில் குளிர்காலம் தொடங்கி விட்டது. இதனால் அங்கும் பன்றிக் காய்ச்சல் பரவல் அதிகரித்து வருகிறது.
அதேசமயம் அமெரிக்காவில் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை குறைந்து வருவதாக கூறப்படுகிறது. இருப்பினும், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் 850 பேர் இறந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.