கோர்ட் வளாகத்தில் பாமக பிரமுகருக்கு கத்திகுத்து
அம்பை: விபத்து வழக்கு தொடர்பாக கோர்ட்டில் ஆஜர்படுத்த அழைத்துவரப்பட்ட பா.ம.க பிரமுகரை கத்தியால் குத்தியவரை போலீசார் தேடி வருகின்றனர்.
அம்பை பெரியகுளம் தெருவை சேர்ந்தவர் இப்ராகிம். இவர் பா.ம.க நகர செயலாளராக உள்ளார். இவரது உறவினர் மைதீன் பிச்சை. இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிள் வாங்கி விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மோட்டார் சைக்கிள் விபத்து தொடர்பாக நேற்று முன்தினம் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து இருவரும் அம்பை போலீசில் புகார் அளித்தனர். போலீசார் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்தனர்.
இதைத்தொடர்ந்து இப்ராகிமை போலீசார் கைது செய்து நேற்று அம்பை கோர்ட்டில் ஆஜர்படுத்த அழைத்து வந்தனர். அப்போது அங்கு வந்த மைதீன் பிச்சையின் உறவினரும், முன்னாள் பா.ம.க மாவட்ட தலைவருமான முரளி, மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து இப்ராகிமை குத்தி விட்டு தப்பியோடிவிட்டார்.
இதில் படுகாயம் அடைந்த இப்ராகிமை மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதற்கிடையே இப்ராகி்மை கத்தியால் குத்தியவரை கைது செய்ய கோரி 100க்கும் மேற்பட்ட பா.ம.க.வினர் அம்பை கோர்ட் முன்பு திரண்டனர்.
தகவல் அறிந்த டி.எஸ்.பி கோபாலன், பா.ம.க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டத்தை கலைத்தார். கத்தியால் குத்திய முரளி மற்றும் மைதீன் பிச்சையை போலீசார் தேடிவருகின்றனர்.