சென்னை வங்கியில் தீ விபத்து, சதியா?
சென்னை: லாக்கரில் இருந்த 100 சவரன் நகைகள் மாயமானதாக புகார் எழுந்த நிலையில், வங்கியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
தாம்பரம் ராஜாஜி தெருவில் உள்ள, 'பாங்க் ஆப் இந்தியா' வங்கியில் இன்று அதிகாலை 3.30 மணி அளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. லேசான புகை மூட்டத்துடன் எரிய தொடங்கிய தீ நேரம் செல்ல செல்ல மளமளவென பரவி வங்கி முழுவதும் கொழுந்து விட்டு எரிந்தது.
வங்கியின் கணக்கு புத்தகங்கள், கம்ப்யூட்டர்கள், மேஜை நாற்காலிகள் உட்பட ரூ.15 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலாயின. வங்கியில் இருந்த நகை-பணம் தப்பித்தது. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதே வங்கியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு 2 வாடிக்கையாளர்கள் லாக்கரில் வைத்திருந்த சுமார் 100 சவரன் நகைகள் மாயமானதாக புகார் தெரிவித்தனர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட 2 வாடிக்கையாளர்களையும் சமாதானப்படுத்த வங்கி அதிகாரிகள் முயற்சி செய்து கொண்டிருந்தனர்.
இந் நிலையில், திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. வங்கி லாக்கரில் பொருட்கள் வைக்கப்பட்டதற்காக ஆதார பைல்கள் எல்லாம் இதில் எரிந்து போயுள்ளன. இதனால், இது திட்டமிட்ட சதியா அல்லது விபத்தா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.