தெலுங்கானா போராட்டம் தீவிரம் - பயங்கர வன்முறை -ரயில்கள், ரேணுகா செளத்ரி வீடு எரிப்பு
தனி தெலுங்கானா மாநிலம் அமைக்கக் கோரி தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி இறுதிப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளது. அக்கட்சித் தலைவர் சந்திரசேகர ராவ் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கக் கிளம்பியபோது கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து வன்முறை வெடித்தது. தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியினருடன் மாணவர்களும் கை கோர்த்துள்ளனர். இதனால் தெலுங்கானா முழுவதும் வன்முறைக் காடாகியுள்ளது.
ஹைதராபாத் அமீர்பேட்டையில் உள்ள பிரபல ஜவுளிக் கடைக்குள் புகுந்து அவர்கள் துணிகளை வெளியே அள்ளி வீசினார்கள். ஊழியர்களை அடித்து விரட்டினார்கள். அப்போது போலீசார் வந்ததால் வன்முறை கும்பல் தப்பி ஓடியது.
ரயில்கள் எரிப்பு...
ஒரு கும்பல் இன்று காலை காக்கிநாடா ரயில் நிலையத்திற்குள் புகுந்து, அங்கு நிறுத்தப்பட்டிருந்த 2 ரயில்களுக்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர். இதில் 2 பெட்டிகள் தீப்பிடித்து எரிந்தன. பெட்டிகளில் பயணிகள் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
இச்சம்பவத்தால் அப்பகுதி வழியாக செல்ல வேண்டிய ரயில்கள் அனைத்தும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.
அரசு பஸ்கள் எரிப்பு...
மேடக் மாவட்டம் தொம்மாட்டா பகுதியில் சென்று கொண்டிருந்த அரசு பஸ்சுக்கு தெலுங்கானா கட்சி தொண்டர்கள் தீ வைத்து எரித்தனர். தவுல்தாபாத் என்ற இடத்திலும் அரசு பஸ் ஒன்று தீ வைத்து எரிக்கப்பட்டது.
வாரங்கல் மாவட்டம் சேரியானா பகுதியில் பயணிகளை இறக்கி விட்டு சென்றபோது அரசு பஸ் எரிக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.
ராவ் நிலைமை மோசம்...
இதற்கிடையே, சிறையில் தனது உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்து வரும் சந்திரசேகர ராவின் உடல் நிலை மோசமடைந்துள்ளாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனால் மேலும் பரபரப்பு அதிகரித்துள்ளது. தெலுங்கானா கட்சி தொண்டர்கள் கடும் ஆத்திரம் அடைந்துள்ளனர். அவர்கள் மீண்டும் கலவரத்தில் ஈடுபட்டுள்ளதால் தெலுங்கானா பகுதியில் இன்று காலை பதட்டம் ஏற்பட்டது.
கரீம்நகர் மாவட்டம் சம்பாலா என்ற இடத்தில் தொண்டர்கள் ஒரு அரசு பஸ்சை தீ வைத்து எரித்தனர். ஹைதராபாத்தின் சித்தல் பகுதியில் இன்னொரு பஸ் எரிக்கப்பட்டது.
வீணவங்கா பகுதியில் உள்ள தாலுகா அலுவலகம் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
கலவரத்தை அடக்க ஹைதராபாத், கரீம் நகர், கம்மம் மாவட்டங்களில் பெருமளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
ரேணுகா செளத்ரி வீடு எரிப்பு..
இந்த நிலையில், கம்மம் நகரில் உள்ள காங்கிரஸ் தலைவர் ரேணுகா செளத்ரியின் வீடு தீவைத்துக் கொளுத்ததப்பட்டது.
இதுகுறித்து ரேணுகா சவுத்ரி கூறுகையில், நேற்று நள்ளிரவில் எனது வீட்டுக்குச் சென்ற தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியினர் எனது வீட்டைத் தாக்கியுள்ளனர்.
மக்களை தூண்டி விட்டு வன்முறையை அவிழ்த்து விட அவர்கள் முயலுகிறார்கள். ஆனால் மக்கள் விழிப்புடன் இருந்து அவர்களின் சதி வலையில் சிக்கி விடக் கூடாது என கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
ரேணுகாவின் வீட்டில் ஒரு கடிதமும் போடப்பட்டுள்ளது. அதில், தெலுங்கானா துரோகியே என ரேணுகாவை விளித்து, தெலுங்கானா மாநிலத்துக்கு ஆதரவு கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.