திருச்செந்தூர் - இடைத்தேர்தலை புறக்கணிக்க மீனவ கிராமங்கள் முடிவு !
திருச்செந்தூர்: திருச்செந்தூர் தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்கப் போவதாக தூத்துக்குடி மாவட்ட மீனவ கிராம மக்கள் அறிவித்துள்ளனர்.
மீனவர்கள் நலன் பாதிக்கும் வகையில் மத்திய அரசு செயல்படுவதாக கூறி, மீனவ மக்கள் அமைப்பு சார்பில் இந்த சட்டம் தொடர்பான ஆலோசனை கூட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள கல்லாமொழியில் நடைபெற்றது.
கிழக்கு கடற்கரை மண்டல ஒருங்கிணைப்பாளர் ராயன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் புன்னக்காயல், இடிந்தகரை, தூத்துக்குடி, வீரபாண்டியபட்டணம், சிங்கிதுறை, கொம்புதுறை, அமலிநகர், மணப்பாடு, பெரியதாழை உள்ளிட்ட கடற்கரையோர பகுதிகளை சேர்ந்த மீனவமக்கள் சுமார் 500 -க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தின் முடிவில் மத்திய அரசின் கடல்மீன் தொழில் ஒழுங்குமுறை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டிசம்பர் 10 -ம் தேதி மீனவ மக்கள் அமைப்பு சார்பில் திருச்செந்தூரில் கண்டன ஆர்ப்பாட்டம், பேரணி நடத்துவது என்றும், திருச்செந்தூர் இடைத் தேர்தலை புறக்கணிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.