கூவத்தை சீராக்க 'சென்னை நதிநீர் ஆணையம்'
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கூவம் ஆற்றை சீரமைத்தல், வானூர்தி தொழிற்பூங்கா மற்றும் நிதி நகரம் ஏற்படுத்துதல் ஆகிய திட்டங்கள் தொடர்பாக சிங்கப்பூர் சென்று அந் நாட்டு அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்களுடன் மேற்கொண்ட ஆலோசனைகள் குறித்த விவரங்களை தமிழக முதல்வர் கருணாநிதியிடம் இன்று துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கினார்.
அப்போது தலைமைச் செயலாளர் ஸ்ரீபதி, தொழிற்துறை முதன்மைச் செயலாளர் பரூக்கி, பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் ராமசுந்தரம், துணை முதல்வரின் செயலாளர் தீனபந்து, கூவம் நதி நிர்வாக அலுவலர் பணீந்திர ரெட்டி, கூவம் நதி நிர்வாக பொறியாளர் காந்திமதி நாதன் ஆகியோர் உடனிருந்தனர்.
கூவம் நதியின் இன்றைய நிலைக்குக் காரணமாகவுள்ள பல்வேறு சுற்றுச்சூழல் பிரச்சனைகள் பற்றியும், அவற்றை எவ்வாறு களைவது என்பது பற்றியும், சிங்கப்பூர் நதியைப் போலவே கூவத்தையும் மாற்றியமைத்திட தேவையான நடவடிக்கைகள் பற்றியும் அப்போது ஸ்டாலின் விளக்கினார்.
கூவம் உற்பத்தியாகும் இடமான திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கூவம் ஏரியிலிருந்து அது கடலில் கலக்கும் இடம் வரை மொத்தம் 65 கி.மீ. நீளத்திற்கு செயல்படுத்தப்பட வேண்டிய திட்டங்கள் பற்றியும் முதல்வர் கருணாநிதி கேட்டறிந்தார்.
இதன் தொடர்ச்சியாக, கூவம் மற்றும் சென்னையில் உள்ள மற்ற நதிகளின் சீரமைப்புத் திட்டங்களை செயற்படுத்துவதற்கு முதற்கட்டமாக 'சென்னை நதிநீர் ஆணையம்" என்ற தனி அமைப்பினை துணை முதல்வர் தலைமையில் ஏற்படுத்துவதென் முடிவெடுக்கப்பட்டது.
இந்த அமைப்பில் குடிசை மாற்று வாரியம், சுற்றுச்சூழல்துறை அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் மற்றும் சம்பந்தப்பட்ட துறைச் செயலாளர்கள் உறுப்பினர்களாக இடம் பெறுவர்.
இந்தக் குழு உடனடியாக அமைக்கப்படுவதோடு உடனடியாக கூவம் சீரமைப்புப் பணிகளை தொடங்குவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.