கேபி கொடுத்த தகவல்-மடக்கப்பட்ட புலிகளின் 3 கப்பல்கள்!
இது குறித்து திவயின என்ற சிங்களப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
கப்பற்படையில் சர்வதேசத்துக்கும் பெரும் ஆச்சரியத்தைத் தந்தது விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் பிரிவு. இலங்கை ராணுவமும் கடல்படையும், கடல்புலிகளைப் பார்த்து நடுங்கினர். ஆனால் இந்தியா மற்றும் பிறநாட்டு உதவி கிடைத்ததால் அவர்கள் புலிகளை தோற்கடித்தனர்.
மற்ற நாடுகளின் உதவியுடன் சர்வதேச கடல் எல்லைகளில் நின்ற விடுதலைப் புலிகளின் கப்பல்களைக் கூட அழித்திருக்கிறது இலங்கை.
இப்போது புலிகளின் வளங்கள் முற்றாக அழிக்கப்பட்டதாக இலங்கை சொல்லித் திரிந்தாலும், உள்ளுக்குள் பெரும் அச்சத்துடன் புலிகள் பற்றி தோண்டித் துருவி விசாரித்து வருகிறது.
புலம் பெயர் தமிழர்கள் தங்கள் தேச விடுதலைக்காக கஷ்டப்பட்டு உழைத்து தந்த பணத்தில் வாங்கப்பட்ட பல சொத்துக்கள் உலகமெங்கும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்த சொத்துக்கள் அனைத்தையும் அபகரித்து நாட்டுடைமையாக்கம் செய்யும் முயற்சியில் உள்ளதாம் இலங்கை.
இப்போது தங்கள் கஸ்டடியில் உள்ள கேபியிடமிருந்து பல தகவல்களைக் கறந்துள்ள இலங்கை ராணுவம், இன்டர்போல் மூலம் அந்த சொத்துக்களை வளைக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது.
அதில் ஒரு பகுதியாக, கேபி காட்டிக் கொடுத்துள்ள புலிகளின் மூன்று பெரிய கப்பல்களை இலங்கைக்கு கொண்டு வருகிறார்களாம்.
இவை தவிர மேலும் மூன்று கப்பல்கள் கூட புலிகளுக்குச் சொந்தமாக உள்ளதாம். அவை நிற்கும் இடங்கள் குறித்த விவரங்களையும் சிங்கள் ராணுவத்தினரிடம் கே.பி கூறியுள்ளாராம்.
இந் நிலையில் நிருபர்களிடம் பேசிய அமைச்சர் ரம்புகவல்ல,
இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் பத்மநாதன் பெயரில் 5 கப்பல்களும், 600 ரகசிய வங்கி கணக்குகளும் இருப்பதாக அவரே ஒப்புக்கொண்டுள்ளார்.
விடுதலைப் புலிகளின் 5 கப்பல்களில் 3 கப்பல்களை உடனடியாக கைப்பற்றவும், பத்மநாதனின் வங்கி கணக்குகளை முடக்கி அவர் பெயரிலான சொத்துகளை இலங்கை அரசுக்கு சொந்தமாக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.