எதிர்க்கட்சி கவுன்சிலர்கள் கூண்டோடு கைது!
சங்கரன்கோவில்: சங்கரன்கோவிலில் சாலை மறியலில் ஈடுபட்ட அ.தி.மு.க, ம.தி.மு.க, தே.மு.தி.க.வை சேர்ந்த 11 கவுன்சிலர்கள் கைது செய்யப்பட்டனர்.
சங்கரன்கோவில் நகராட்சியின் சாதாரண கூட்டம் நடைபெற இருந்தது. கூட்டத்துக்கு தலைவர், துணை தலைவர் வராததால் ஆணையாளர் (பொறுப்பு) முத்து கண்ணு, உறுப்பினர் சங்கரகுமார் தலைமையில் கூட்டத்தை நடத்தினர்.
கூட்டம் முடிந்ததும் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து அ.தி.மு.க, ம.தி.மு.க, தே.மு.தி.க கவுன்சிலர்கள் கோஷங்களை எழுப்பியபடி நகராட்சி அலுவலகம் முன்பாக பஸ் நிலையம் செல்லும் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சாலை மறியலில் ஈடுபட்ட அ.தி.மு.க, தே.மு.தி.க, ம.தி.மு.க கவுன்சிலர்கள் கண்ணன், நேரு, குணசேகரன், பேச்சியப்பன், வேல்சாமி, குமாரவேல், ஆறுமுகம், உமாவதி, முகமது ஹக்கீம், பாஞ்சலி, டைட்டன் ஆகிய 11 பேரை போலீசார் கைது செய்தனர்.