இனி எஸ்எம்எஸ் மூலம் பென்ஷன் பற்றிய தகவல்!
சென்னை: பென்ஷன் மற்றும் ஓய்வூதியம் குறித்த தகவல்கள் இனி எஸ்எம்எஸ் மூலம் சம்பந்தப்பட்டவர்களுக்கு உடனுக்குடன் தெரிவிக்கப்படும் என்று தமிழ்நாடு தணிக்கை மற்றும் கணக்குகள் துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து இந்திய தணிக்கை மற்றும் கணக்குகள் துறை துணை அக்கவுண்டன்ட் ஜெனரல் பி.கோபால் (பென்ஷன்) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு தலைமை கணக்காயர் (கணக்கு மற்றும் பணிவரவு) கே.ஸ்ரீனிவாசன், மாநில அரசு ஓய்வூதியதாரர் மற்றும் பொதுசேமநல நிதி சந்தாதாரர்களுக்கான எஸ்.எம்.எஸ்.சேவையை (குறுந்தகவல் சேவை) தொடங்கியுள்ளார்.
முதல் கட்டமாக, கணக்காயர் அலுவலகத்தில் ஓய்வூதியதாரரின் விண்ணப்பம் பெறப்பட்ட உடனே அதைப் பற்றிய தகவல் உடனடியாக ஓய்வூதியதாரருக்கு அனுப்பப்படும். ஓய்வூதிய வழக்காணை (பென்ஷன் பேமண்ட் ஆர்டர்) அனுப்பும்போது, மறுபடியும் ஒரு எஸ்.எம்.எஸ். ஓய்வூதியதாரர்களுக்கு அனுப்பப்படும். ஒருவேளை விண்ணப்பத்தில் ஏதாவது குறையிருந்து திருப்பி அனுப்பப்பட்டால் அந்த தகவலும் எஸ்.எம்.எஸ்.மூலம் தெரிவிக்கப்படும்.
இரண்டாம் கட்டமாக, இந்த திட்டம் பொதுசேமநல நிதி கணக்கு முடிப்பு (Final Withdrawal) மற்றும் இதர தகவல்கள் விரிவுபடுத்தப்பட உள்ளது. ஓய்வூதியதாரர்கள் தங்களது விவரங்களை எஸ்.எம்.எஸ். மூலம் இந்த அலுவலகத்திற்கு அனுப்புவதற்கு வசதியாக விரைவில் செல்போன் நம்பர் அறிவிக்கப்படும்" என்று கூறப்பட்டுள்ளது.