உல்ஃபா தலைவர் வங்கதேசத்தில் கைது?-பேச்சுவார்த்தை முன்வந்தார்?
இந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் அபுர்பா பரூவாவும் கைது செய்யப்பட்டுள்ளார். இருவரும் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இருவரும் சிறப்பு விமானம் மூலம் நேற்றிரவு டெல்லி கொண்டு வரப்பட்டதாக ஒரு தகவலும் ஆனால், இன்று தான் அவர்கள் சிறப்பு விமானம் மூலம் குவஹாத்தி கொண்டு வரப்படுவதாக இன்னொரு தகவலும் வெளியாகியுள்ளன.
இவர்கள் வங்க தேசத்தில் நீண்ட காலமாக பதுங்கியிருந்தனர். இவர்களைப் பிடிக்க இந்தியாவுக்கு அமெரிக்காவின் உளவு அமைப்பான சிஐஏ உதவியதாகத் தெரிகிறது.
இன்டர்போல் மூலம் வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட இந்த இருவரையும் இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு வங்கதேசத்துக்கு அமெரிக்கா நெருக்குதல் தந்ததால் அவர்களை வங்கதேச எல்லைப் பாதுகாப்புப் படையினர் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினரிடம் நேற்று மாலை ஒப்படைத்ததாக தகவல்கள் வருகின்றன. ஆனால், இதை மத்திய அரசு இன்னும் உறுதி செய்யவில்லை.
தலைநகர் டாக்காவில் வைத்து இருவரையும் வங்கதேச சிறப்புப் போலீஸ் படையினர் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்ததாக தெரிகிறது.
பேச்சு நடத்த உல்பா தயார்-சிதம்பரம்:
இந் நிலையில் உல்பா அமைப்பு மத்திய அரசுடன் பேச்சு நடத்தவும் முன் வந்துள்ளதாகத் தெரிகிறது. இது தொடர்பாக உல்பாவே முக்கியமான அறிக்கையை வெளியிடவுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் நேற்று ராஜ்யசபாவில் தெரிவித்தார்.
அவர் இதைக் கூறிய சில மணி நேரங்களில் உல்பா தலைவர்கள் டாக்காவில் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாயின.
இதனால் இந்தக் கைது நடவடிக்கைக்கு முன்னதாகவே உல்பாவிடம் மத்திய உளவுப் பிரிவான ரா மற்றும் ஐ.பி. ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியிருக்கலாம் என்று தெரிகிறது.
இந்தப் பின்னணியில் தான் வங்கதேச போலீசார் கைது செய்ய வந்தபோது தப்பிக்க முயலாமல் அவர்கள் கைதாகியுள்ளனர்.
உல்பாவின் மத்திய கமிட்டியைச் சேர்ந்த 17 முக்கிய தலைவர்களி்ல் பெரும்பாலானவர்கள் கடந்த சில ஆண்டுகளில் ஒருவர் பின் ஒருவராக பிடிபட்டபோதும் அதன் முக்கியத் தலைவரான பரேஷ் பருவா மட்டுமே இன்னும் கைது செய்யப்படவில்லை.
(சில ஆண்டுகளுக்கு முன் பூடானில் அந் நாட்டு பாதுகாப்புப் படையும் இந்தியப் படைகளும் இணைந்து நடத்திய ரகசிய தாக்குதலில் உல்பாவின் 3 தலைவர்கள் பலியானது குறிப்பிடத்தக்கது)
இது குறித்து சிதம்பரம் கூறுகையி்ல், அடுத்த சில தினங்களில் பேச்சுவார்த்தைக்கு வருவது குறித்து உல்பா முக்கிய அறிவிப்பை வெளியிடலாம். அப்படி பேச்சு நடத்த வந்தால் நாங்கள் அதை ஏற்போம். அதற்கு இரு நிபந்தனைகள் தான். வன்முறையை அவர்கள் உடனடியாகக் கைவிட்டுவிட்டு, நாட்டின் இறையாண்மைக்கு பங்கம் ஏற்படுத்த மாட்டோம் என்று உறுதி தந்தால் எங்களுடன் தராளமாகப் பேசலாம் என்றார்.
வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா டிசம்பர் 19ம் தேதி இந்தியா வருகிறார். இந் நிலையில் அரபிந்தா ராஜ்கோவா கைது செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
ஆனால், 56 வயதாகும் ராஜ்கோவா, கடந்த 20 வருடங்களாக வங்கதேசத்தில்தான் பதுங்கி இருந்து வந்தார். அங்கு பல்வேறு தீவிரவாத முகாம்களை அமைத்து அஸ்ஸாமில் பல்வேறு தாக்குதல்களை ஒருங்கிணைத்து நடத்தி வந்தார்.
1979ம் ஆண்டு ஐந்து பேருடன் இணைந்து உல்ஃபா அமைப்பை உருவாக்கினார் ராஜ்கோவா. இந்த அமைப்பின் தலைமைக் கமாண்டராக பரேஷ் பருவா இருக்கிறார். இவரும் வங்கதேசத்தில்தான் வசித்து வந்தார். ஆனால் தற்போது சீனாவுக்கு ஓடிப் போய் விட்டதாகக் கருதப்படுகிறது.
அதே நேரத்தில் பேச்சுவார்த்தைக்கான வழிகளை திறந்து வைக்கவே அவரை மத்திய அரசு விட்டு வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
கடந்த மாதம் உல்ஃபா அமைப்பின் வெளியுறவு செயலாளர் சாஷா செளத்ரி, நிதித்துறை செயலாளர் சித்ரபான் ஹசாரிகா ஆகியோரை வங்ககதேசம் கைது செய்து இந்தியாவிடம் ஒப்படைத்தது நினைவிருக்கலாம்.
கைதாகவில்லை-ராஜ்கோவா மறுப்பு:
இந் நிலையில் வட கிழக்கு மாநில முக்கிய தொலைக்காட்சியான நார்த் ஈஸ்ட் டிவியை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட ராஜ்கோவா, என்னை யாரும் கைது செய்யவில்லை. நான் இன்னும் எனது முகாமில் தான் இருக்கிறேன் என்று கூறியுள்ளார். இதனால் இந்த விவகாரத்தில் புதிய குழப்பம் நிலவுகிறது.
பெங்களூர் குண்டுவெடிப்பு தீவிரவாதி கைது:
இந் நிலையில் பெங்களூர் தொடர் குண்டுவெடிப்பில் தொடர்புடைய முக்கிய தீவிரவாதி உள்பட 2 பேர் இந்திய-வங்கதேச எல்லையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு ஜூலை 25ம் தேதி பெங்களூரில் 8 இடங்களில் அடுத்தடுத்து தொடர் குண்டுவெடிப்பு நடந்தது. இதில் ஒரு பெண் பலியானார். இதுதொடர்பாக கேரளாவைச் சேர்ந்த 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
முக்கிய தீவிரவாதியான கேரளத்தைச் சேர்ந்த நசீர் உள்ளிட்ட சிலரை பெங்களூர் போலீஸார் தேடிவந்தனர்.
இந் நிலையில் மேகாலயா மாநிலத்தை ஒட்டிய வங்கதேச எல்லையில் அந்நாட்டு போலீஸாரும் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினரும் கூட்டு சோதனை நடத்தி அங்கு பதுங்கியிருந்த நசீரையும் அவரது கூட்டாளி சம்சுதீரையும் கைது செய்தனர்.
நசீரை விசாரிக்க பெங்களூரில் இருந்து தனிப்படை போலீஸார் மேகாலயாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்தியா-பங்களாதேஷ் ஒப்பந்தம்:
இந் நிலையில் தீவிரவாதிகளை கட்டுப்படுத்துவது குறித்து இந்தியா-பங்களாதேஷ் இடையே நீண்ட கால முயற்சிக்குப் பின் இப்போது தான் புதிய ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. டெல்லி வரும் அந் நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா இந்த ஒப்பந்தங்களில் கையெழுத்திடவுள்ளார்.