ஹெட்லி-ராணாவுடன் தொடர்பு: தவறான தகவலால் நாடு கடத்தப்பட்ட இந்தியர்
மும்பை: ராணா மற்றும் ஹெட்லியுடன் தொடர்புடைய அலுவலகங்கள் மூலம் குடியேற்ற சேவையை மேற்கொண்ட இந்தியரை அமெரிக்க எப்.பி.ஐ அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பினர். அவரை டெல்லி விமான நிலையத்தில் விசாரித்த இந்திய குடியுரிமைப் பிரிவு அதிகாரிகள் அவருக்கும், ஹெட்லி, ராணாவுக்கும் தொடர்பில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளனர்.
ஹெட்லி, ராணாவின் மும்பை குடியுரிமை சேவை அலுவலகம் மூலம் அந்த இந்தியர் விசா உள்ளிட்ட ஆவணங்களைப் பெற்று அமெரிக்காவுக்குச் சென்றார். அங்கு அவர் ஹெட்லி, ராணாவின் அலுவலகங்கள் மூலமாக விசா உள்ளிட்டவற்றைப் பெற்றதை அறிந்த அமெரிக்க எப்.பி.ஐ அதிகாரிகள் இந்தியாவுக்கு நாடு கடத்தி விட்டனர்.
மேலும், இந்திய குடியரிமைப் பிரிவு அதிகாரிகளுக்கும் அந்த இந்தியர் குறித்த தகவலைத் தெரிவித்தனர். டெல்லிக்கு வந்து சேர்ந்த அந்த இந்தியரை இந்தியக் குடியுரிமை அதிகாரிகள் விசாரித்தனர். விசாரணையில், ஹெட்லி, ராணா அலுவலங்கள் மூலமாக குடியேற்ற சேவையை பெற்றதைத் தவிர அவர் வேறு எந்தத் தவறும் செய்யவில்லை. ஹெட்லி, ராணா குறித்து அவருக்குத் தெரியாது எனத் தெரிய வந்ததால் அவரை சொந்த மாநிலமான குஜராத் திரும்பிச் செல்ல அதிகாரிகள் அனுமதித்தனர்.
சம்பந்தப்பட்ட இந்தியர் குடியுரிமை அதிகாரிகளிடம் கூறுகையில், ஹெட்லி, ராணாவின் தீவிரவாதத் தொடர்புகள் குறித்தோ, அவர்கள் குறித்தோ எனக்கு எதுவும் தெரியாது. பெரும் பணம் கொடுத்து விசா உள்ளிட்ட ஆவணங்களை நான் மும்பை அலுவலகத்திலிருந்து பெற்றேன்.
அமெரிக்கா சென்று அங்கிருந்து கனடா செல்லத் திட்டமிட்டிருந்தேன். ஆனால் போலியான ஆவணங்கள் மூலம் நான் அமெரிக்கா வந்ததாக கூறி அமெரிக்க அதிகாரிகள் என்னை நாடு கடத்தி விட்டனர் என்றார் அவர்.
அவரது பெயர் உள்ளிட்ட விவரங்கள் வெளியிடப்படவில்லை.