நடிகை விஜயசாந்தி வீடு முற்றுகை: ராவுக்கு திரவ உணவு திணிப்பு
ஹைதராபாத்: தனி தெலுங்கானா கோரிக்கைக்காக டி.ஆர்.எஸ் தலைவர் சந்திரசேகர ராவ் மருத்துவமனையில் இருந்தபடியே 6வது நாளாக இன்றும் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறார்.
எவ்வளவு வற்புறுத்தியும் திட உணவு எடு்த்துக்கொள்ள மறுத்துவருவதால், அவருக்கு வலுக்கட்டாயமாக திரவ உணவை மருத்துவர்கள் வழங்கி வருகிறார்கள்.
தெலுங்கானா தனி மாநிலம் அமைக்க மத்திய-மாநில அரசுகள் உறுதி அளித்தால்தான் உண்ணாவிரதத்தை கைவிடுவேன் என்று திட்டவட்டமாக கூறிவருகிறார் சந்திரசேகர ராவ்.
தொடர்ந்து 6வது நாளாக திட உணவு எடுத்துக்கொள்ளாததால், அவருக்கு வலுக்கட்டாயமாக குளுக்கோஸ் மற்றும் இதர திரவ உணவை அளித்து வருகிறார்கள்.
நேற்று அவருக்கு நுரையீரலில் தொற்று கிருமி பாதிப்பிருந்ததை கண்டுபிடித்து அதற்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பிறகு அவரது உடல்நிலை ஓரளவு கட்டுப்பாட்டில் உள்ளது.
103 அரசு பஸ்கள் எரிப்பு:
சந்திரசேகர ராவ் உண்ணாவிரதத்தால், கடந்த 5 நாட்களாக தெலுங்கானா பகுதியில் நடந்த கலவரங்களில் மொத்தம் 103 அரசு பஸ்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. 22 அரசு அலுவலகங்களை தெலுங்கானா கட்சி தொண்டர்கள் தீ வைத்து எரித்தனர். 24 தனியார் பஸ்கள் அடித்து உடைக்கப்பட்டன. இது தொடர்பாக 5392 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
பள்ளி, கல்லூரிகள் விடுமுறை:
தெலுங்கானா பகுதியில் நிலவும் கலவரச் சூழல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்குள்ள அனைத்து கல்வி நிறுவனங்களையும் மூட அரசு உத்தரவிட்டுள்ளது.
ஐதராபாத், ரங்கா ரெட்டி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்றுமுதல் 15 நாட்களுக்கு அரசு, தனியார், பள்ளி, கல்லூரி, பாலிடெக்னிக் என அனைத்து கல்வி நிறுவனங்களையும் மூடுமாறு ஆந்திர அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
நடிகை விஜயசாந்தி வீடு முற்றுகை
ஹைதராபாத் பஞ்சராஹில்ஸ் பகுதியில் வசிக்கும் தெலுங்கானா கட்சி எம்.பி.யும் நடிகையுமான விஜயசாந்தி வீட்டை மாணவர்கள் முற்றுகையிட்டனர்.
'தெலுங்கானா தனி மாநிலம் அமைய நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் மசோதா நிறைவேற்ற போராட வேண்டும், தெலுங்கானா தனி மாநில போராட்டத்தில் பங்கேற்க வேண்டும்' என்றும் அவர்கள் கோஷமிட்டனர்.
அப்போது அங்கு வந்த விஜயசாந்தி, 'நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்ற போராடுவேன்' என்று உறுதி அளித்தார். இதையடுத்து மாணவர்கள் கலைந்து சென்றனர்.
மீண்டும் தீ்க்குளிப்பு:
தெலுங்கானா ராஷ்டிர சமிதி தலைவர் சந்திரசேகர ராவை கைது செய்தபோது அவரின் ஆதரவாளர்கள் நடத்திய போராட்டத்தி்ன் போது தீ்க்குளித்த தொண்டர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கரீம் நகர் அருகே எல்.பி நகர் பகுதியில் நடந்த போராட்டத்தின் போது நல்கொண்டா மாவட்டத்தை சேர்ந்த ஸ்ரீகாந்த் (28) என்ற தொண்டர் தீக்குளித்தார்.
உடலில் 70 சதவீதம் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.