18 வயது பெண் பஞ். தலைவியானது செல்லாது!
சென்னை: 21 வயதுக்கும் குறைவான வயதுடைய பெண் ஊராட்சித் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மேலும் அந்த ஊராட்சிக்கு மறு தேர்தல் நடத்தவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வேலூர் மாவட்டம், சேக்கனூர் பஞ்சாயத்து தலைவர் தேர்தல் கடந்த 2006ம் ஆண்டு அக்டோபர் 30ம் தேதி நடந்தது. பெண்களுக்கான பஞ்சாயத்து இது.
இதில், மகாலட்சுமி, எஸ்.மாலதி உள்பட 4 பெண்கள் போட்டியிட்டனர். இறுதியில் மாலதி, 702 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதை எதிர்த்து மகாலட்சுமி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், 21 வயதுக்கு குறைவான வயதில் மாலதி போட்டியிட்டது தவறு என்று மனுவில் கூறியிருந்தார்.
ஆனால் வேலூர் விரைவு கோர்ட் இந்த வழக்கை தள்ளுபடி செய்துவிட்டது. பழிவாங்கும் நோக்கில் வழக்கு தொடரப்பட்டுள்ளது என்று கோர்ட் கூறியது.
இதையடுத்து மகாலட்சுமி உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்தார். அதில், வேட்பு மனு தாக்கல் செய்யும்போது மாலதிக்கு 18 ஆண்டு 4 மாதம் 24 நாட்கள் தான் ஆகிறது. அதாவது அவர் 19 வயதுக்கு குறைவானவர்.
தேர்தல் விதிமுறைப்படி 21 வயது பூர்த்தி ஆனவர்தான் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட முடியும். மாலதிக்கு குறைவான வயது என்று நான் எதிர்ப்பு தெரிவித்தும் தேர்தல் அதிகாரி கேட்கவில்லை.
21 வயது பூர்த்தியான சான்றிதழையும் மாலதி வழங்கவில்லை. எனவே அவர் வெற்றி பெற்றதை ரத்து செய்யவேண்டும். 528 ஓட்டுகள் பெற்ற என்னை வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்.
இதை விசாரித்த நீதிபதி பழனிவேலு, தாக்கல் செய்துள்ள ஆதாரங்களை பார்க்கும்போது மாலதியின் பிறந்தநாள் 3.6.1987 ஆகும். எனவே தேர்தல் சமயத்தின்போது அவருக்கு 21 வயது நிரம்பவில்லை. மேலும் தனது பிறந்த நாளுக்கான ஆதாரத்தை அவர் தாக்கல் செய்யவில்லை.
விரைவு நீதிமன்றம் இந்த ஆவணங்களை பரிசீலிக்க தவறிவிட்டது. ஆகவே, மாலதி வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவிக்கப்படுகிறது. மீண்டும் தேர்தலை நடத்த மாவட்ட கலெக்டர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தீர்ப்பளித்தார்.