டிஎன்பிஎஸ்சி குரூப் 1 நேர்முகத் தேர்வு முடிவை வெளியிட இடைக்காலத் தடை
சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் ஒன் பிரிவுக்கான நேர்முகத் தேர்வு முடிவுகளை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
ஈரோட்டை சேர்ந்த வேலுச்சாமி உள்ளிட்ட 3 பேர் இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில்,
2006-07 ஆம் ஆண்டுக்கான குரூப் 1 தேர்வினை எழுதினோம். இதில் காத்திருப்போர் பட்டியலில் நாங்கள் இடம் பெற்றோம். அதன் பின்னர் தேர்வில் நடந்த முறைகேடுகளை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கின் முடிவில் தேர்வு முடிவுகளை வெளியிட உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதையடுத்து 2006-07 ஆம் ஆண்டுக்கான 172 குரூப் 1 பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. ஆனால் இதில் பெரும்பாலான பணியிடங்களில் தேர்வான நபர்கள் சேரவில்லை. இதனால் காலி பணியிடங்கள் உருவாகி உள்ளன.
இது குறித்து சம்பந்தப்பட்ட துறையும் தேர்வாணையத்திற்கு காலி பணியிடங்கள் குறித்து தகவல் தெரிவிக்கவில்லை. காலி பணியிடங்கள் ஏற்பட்டால் காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களை பணி நியமனத்திற்கு அழைக்க வேண்டும். ஆனால் இதுவரை தேர்வாணையம் அதற்குரிய நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை.
இந்நிலையில் 2008-09ம் ஆண்டுக்கான குரூப் 1 பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு முடிந்து நேர்முகத் தேர்வு நேற்றும், இன்றும் நடைபெற்று வருகிறது. இதன் முடிவுகள் வெளியிடப்பட்டால் ஏற்கனவே காத்திருப்போர் பட்டியலில் உள்ள நாங்கள் பாதிக்கப்படுவோம்.
எனவே 2006-07 ம் ஆண்டுக்கான குரூப் 1 பணியிடங்களில் ஏற்பட்டுள்ள காலியிடங்களுக்கு காத்திருப்போர் பட்டியலில் உள்ள எங்களை நியமிக்கும்படி அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு உத்தரவிட வேண்டும்.
அதுவரை 200809 ஆம் ஆண்டுக்கான குரூப் 1 பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி தனபாலன், 2008-09 ஆம் ஆண்டுக்கான குரூப் 1 தேர்வில் நேர்முக தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதித்தார். மேலும், டிசம்பர் 9ந் தேதிக்குள் இதுகுறித்து விளக்கம் அளிக்கும்படி டிஎன்பிஎஸ்சி செயலாளருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.