சத்யம் ராஜூவின் சொத்துக்களை யாரும் வாங்க - விற்க தடை!
ஹைதராபாத்: சத்யம் நிறுவனர் ராமலிங்க ராஜூவின் பினாமி பெயர்களில், ஹைதராபாத் புறநகர் பகுதிகளில் உள்ள 2,807 ஏக்கர் நிலத்தை பதிவு செய்வதற்கும், நிலம் தொடர்பான மற்ற அனைத்து பரிவர்த்தனைகளுக்கும் ஆந்திர அரசு தடை விதித்துள்ளது.
சத்யம் நிறுவனங்களின் தலைவர் ராமலிங்க ராஜூ மற்றும் அவரது சகாக்கள், 14 ஆயிரம் கோடிக்கு மேல் மோசடி செய்துள்ளனர். இந்த உண்மை வெளியில் தெரிய வந்ததும், ராஜூ தாமாகவே சரணடைந்தார்.
இப்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், ராமலிங்க ராஜுக்கு சொந்தமாக ஐதராபாத், சென்னை, பெங்களூரு, நாக்பூர் நகரங்களில் உள்ள 1,000 கோடி மதிப்பிலான 287 சொத்து ஆவணங்களை அமலாக்கப் பிரிவினர் கைப்பற்றி சோதனை நடத்தினர்.
விசாரணையில், இந்த சொத்துக்கள் அனைத்தும் முறைகேடு செய்த பணத்தில் வாங்கப்பட்டது என்று உறுதி படுத்தப்பட்டது. இதையடுத்து, இந்த நிலங்களை விற்பதற்கோ அடமானம் வைப்பதற்கோ தகுதியற்றதாக செய்து வருகின்றனர் அதிகாரிகள்.
விவசாய நிலங்கள் என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த நிலங்கள் வணிக நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் என்றும், ஹைதராபாத், சென்னை, பெங்களூரு மற்றும் நாக்பூரில் இவை உள்ளதாகவும் கண்டறியப்பட்டிருக்கின்றன.
இந்நிலையில், சி.பி.ஐ. மேலும் மேற்கொண்ட தேடுதல் வேட்டையில் அவரும் அவரது சகோதரர்களும் மனைவிகளும் வாங்கி குவித்த சொத்துகள் எண்ணிக்கை கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. இதில், 1,065 வீடுகள், நிலங்கள், கட்டடங்களை வாங்கி குவித்துள்ளனர். அதன் அரசு மதிப்பு 350 கோடியாகும்.
சென்னையிலும்...
இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள 1,065 சொத்துகளில், ஆந்திராவின் கடலோர மாவட்டங்களில் 109ம், கர்நாடாகாவில் 11ம், நாக்பூரில் 40ம், சென்னையில் 29ம் உள்ளன.
இதில் அவரது சகோதரர்கள், அவர்களது மனைவிமார்களின் பெயரில் 6,012 ஏக்கர் நிலமும், 1,12,425 சதுர அடி கொண்ட வீடுகளும், 87,439 சதுர அடி கொண்ட கட்டடங்களும் பினாமியாக சொத்துக்கள் வாங்கப்பட்டுள்ளன.
இந்த சொத்துக்களை இனி யாரும் விற்கவோ வாங்கவோ முடியாத அளவுக்கு சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்துள்ளனர் சிபிஐ மற்றும் மாநில போலீசார்.