சென்னை ரயில் நிலையத்துக்கு குண்டு மிரட்டல்-பெண் கைது
சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்துக்கு (செயின்ட் தாமஸ் மவுன்ட்) இன்று அதிகாலை 2 மணிக்கு மர்ம தொலைபேசி அழைப்பு வந்தது.
அதில் பேசிய பெண் ரயில் நிலையத்தில் குண்டு வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டிவிட்டு இணைப்பைத் துண்டித்தார்.
இதையடுத்து தாம்பரம் ரயில்வே போலீசாரும் வெடிகுண்டு நிபுணர்களும் தீவிர சோதனை நடத்தினர்.
நீண்ட சோதனைக்கு பின் அது வெறும் மிரட்டல் என்று தெரிய வந்தது.
இதற்கிடையே போனில் பேசிய மர்ம பெண்ணின் செல்போன் நம்பரை வைத்து அவரது முகவரியை போலீசார் கண்டு பிடித்தனர்.
அவர் சேலையூரை அடுத்த முடிச்சூர் பகுதியைச் சேர்ந்த சேவியர் என்பவரது மனைவி உமா என்று தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.
இரவு தூங்கும்போது பரங்கிமலை ரயில் நிலையத்தில் குண்டு வெடிப்பது போல கனவு கண்டதாகவும், அதனால் மக்களை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக தகவல் தெரிவித்தாகவும், யாரையும் மிரட்ட இப்படிச் செய்யவில்லை என்றும் கூறி அழுதார்.
அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. அவரது மன நிலை குறித்தும் பரிசோதனை நடத்தப்படவுள்ளது.
தென்காசியில் குண்டு வைக்க அரபு நாட்டில் சதி?:
இந் நிலையில் தென்காசியில் தாக்குதல் நடத்த அரபு நாட்டில் சதித் திட்டம் தீட்டப்பட்டதாக கோவையிலிருந்து கடையநல்லூர் போலீஸாருக்கு வந்த மர்ம போன் தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் கடையநல்லூர் போலீஸ் நிலையத்திற்கு நேற்று ஒரு மர்ம போன் வந்தது. போனில் பேசிய ஆசாமி தனது பெயரை இப்ராகீம் என என கூறியுள்ளார்.
அவர் போனில சொன்ன தகவல்கள் போலீசாரை அதிர்ச்சி அடைய செய்தன. போனில் பேசியவர் போலீஸாரிடம் கூறுகையில், அரபு நாட்டு விமான நிலையம் ஒன்றில் நின்றபோது அங்குள்ள கழிவறையில் ஒரு பேப்பர் கிடந்தது. அதை ஒரு நேபாளி எடுத்த பார்த்தபோது அதில் இருந்த வரைப்படத்தில் தென்காசி யானை பாலம், கோயில் உள்ளிட்டவை குறிப்பிடப்பட்டிருந்தன என போலீஸாரிடம் தெரிவித்தார்.
மேலும் பாகிஸ்தானில் இருந்து 4 தீவிரவாதிகள் கொச்சி வழியாக தென்காசிக்குள் ஊடுருவ இருப்பதாகவும் போனில் பேசியவர் தெரிவித்தார். தான் கோவையில் இருந்து பேசுவதாக கூறி ஒரு போன் நம்பரையும் தெரிவித்தார்.
ஊஷாரான போலீசார் இதுபற்றி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஸ்ரா கர்கிடம் தெரிவித்தனர். போனில் பேசியவர் கொடுத்த டெலிபோன் எண்ணில் தொடர்பு கொண்டபோது அது எஸ்டிடி பூத் என தெரியவந்தது. இதை தொடர்நது எஸ்பி உத்தரவின் பேரில் மாவட்ட எல்லைகளில் உள்ள செக் போஸ்டுகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கேரள எல்லையான புளியரை தமிழக செக் போஸ்டில் வழக்கத்தை விட கூடுதல் போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.
கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகிறது. தென்காசி யானை பாலம், கோவிலுக்கும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கோவில் வாசலில் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்யப்படுகிறது.
தென்காசியில் முக்கிய இடங்களில் போலீசார் ரோந்து சுற்றி கண்காணித்த வண்ணம் உள்ளனர். வாகன தணிக்கைகளும் நடந்து வருகின்றன. சந்தேகத்திற்கிடமாக நிற்பவர்களை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
லாட்ஜுகளிலும் அதிரடி சோதனை நடத்தப்பட்டு சந்தேகத்திற்குரிய நபர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
கடையநல்லூர் போலீஸ் நிலையத்திற்கு வந்த மர்ம போன் விவகாரம் நெல்லை மாவட்டம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.