சர்வதேச நெருக்கடி-கோபன்ஹேகன் மாநாட்டில் பிரதமர் பங்கேற்பு
டெல்லி: சர்வதேச அளவில் குறிப்பாக அமெரிக்கா மற்றஉம் சீனாவின் நெருக்கடி எதிரொலியால் கோபன்ஹேகன் நகரி்ல நடைபெறவுள்ள புவிவெப்ப மாற்றத் தடுப்பு தொடர்பான மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொள்ள முடிவு செய்துள்ளார்.
முதலில் மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தலைமையிலான குழுதான் பங்கேற்பதாக இருந்தது. ஆனால் நெருக்கடி அதிகரித்துள்ளதால் தற்போது பிரதமரே கலந்து கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
டென்மார்க்கின் கோபன்ஹேகனில் புவிவெப்ப மாற்ற தடுப்பு குறித்த மாநாடு நடைபெறுகிறது. இதில் உலகத் தலைவர்கள் பலரும் பங்கேற்கின்றனர். தத்தமது நிலையை இதில் சொல்லவுள்ளனர். அதன் அடிப்படையில் உடன்பாடு ஏற்படுத்தப்படவுள்ளது.
இந்த மாநாட்டுக்கு முன்பாகவே ஒவ்வொரு முக்கிய நாடும், தாங்கள் புகை மாசை எந்த அளவுக்குக் (ஆளுக்கு எத்தனை பெர்சன்ட் என்பதை) குறைக்கப் போகிறோம் என்பதை தெரிவித்து வருகின்றன.
உலக அளவில் புகை மாசை அதிகம் வெளியேற்றும் சீனா, அமெரிக்கா போன்ற நாடுகள் இந்த சதவீதக் கணக்கை வெளியிட்டு இந்தியாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தின. இதனால் இந்தியாவும் தன் பங்குக்கு 2020ம் ஆண்டுக்குள் 20 முதல் 25 சதவீத புகை மாசைக் குறைக்கப் போவதாக தெரிவித்தது.
இருப்பினும் இதை சட்டம் போட்டு தங்களை கட்டுப்படுத்த முடியாது என்றும் இந்தியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இந்த நிலையில்தான் பிரதமரே இந்த மாநாட்டில் பங்கேற்பார் என்று தெரிவிக்கப்படடுள்ளது. கடந்த வாரம் இதுகுறித்து பிரதமர் கூறுகையில் மாநாட்டுக்குப் போவது குறித்து யோசித்துக் கொண்டிருப்பதாக கூறியிருந்தார். இந்த நிலையில் அவர் பங்கேற்க முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஒபாமாவும் பங்கேற்கிறார்.