மீண்டும் தெலுங்கானா பந்த்-மோசமாகும் ராவ் உடல் நிலை
தனி தெலுங்கானா மாநிலம் கோரி தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி பெரும் போராட்டத்தில் குதித்துள்ளது. இறுதிப் போராட்டம் என அக்கட்சித் தலைவர் சந்திரசேகர ராவ் அறிவித்து சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளதால், தெலுங்கானா பிராந்தியம் பெரும் கொந்தளிப்புடன் காணப்படுகிறது.
இந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக கடந்த வாரம் 24 மணி நேர பந்த் போராட்டத்தை ராவ் கட்சி நடத்தியது. இந்த நிலையில் இன்று நள்ளிரவு முதல் 24 மணி நேர பந்த்துக்கு அது அழைப்பு விடுத்துள்ளது.
பந்த் குறித்த அறிவி்ப்பை ராவ் கட்சித் தலைவர்கள் அறிவித்தவுடன் கட்சித் தொண்டர்கள் ஹைதராபாத் முழுவதும் கடைகளை மூடும்படி வற்புறுத்தி வருகின்றனர். சில இடங்களில் வர்த்தக நிறுவனங்கள் தாக்கப்பட்ட சம்பவங்களும் நடந்துள்ளன.
உடல் நலம் மோசமடைகிறது..
இதற்கிடையே, இன்று ராவ் 7வது நாளாக உண்ணாவிரதத்தை மேற்கொண்டு வருகிறார். தற்போது ராவ், ஹைதராபாத் நிஜாம் மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரது உடல் நலனை, டாக்டர் பிரசாதராவ் தலைமையிலான டாக்டர்கள் குழு கண்காணித்து வருகிறது. இந்தக் குழுவில் 30 டாக்டர்கள் இடம் பெற்றுள்ளனர்.
தொடர்ந்து திட உணவை ஏற்க மறுத்து பிடிவாதமாக இருந்து வருகிறார் ராவ். இதனால் மிகவும் சோர்வடைந்து விட்டார். ரத்தம் அழுத்தத்தை டாக்டர்கள் பரிசோதித்தபோது, பொட்டாசியம் சோடியத்தின் அளவு குறைந்துள்ளது தெரியவந்தது.
நிலைமை இப்படியே சென்றால் மூளை பாதிக்கப்பட்டு கோமா நிலைக்கு அவர் போகக் கூடிய ஆபத்து இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
அவரது சிறுநீரகத்திலும் தொற்று கிருமிகள் பரவி உள்ளன. அவற்றை அழிக்க அவரது உடலில் மருந்துகள் செலுத்தப்பட்டன. சிறுநீரக மருத்துவ நிபுணர்கள் இச் சிகிச்சை அளித்தனர்.
மரணத்தைக் கண்டு அஞ்சவில்லை - ராவ்
உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும் தன்னைப் பார்க்க வருபவர்களிடம் அவர் மெதுவான குரலில் பேசுகிறார்.
ராவ் தன்னை சந்தித்த செய்தியாளர்களிடம் பேசுகையில்,
எனது லட்சியம் தெலுங்கானா தனி மாநிலம்தான். அதற்காகத் தான் நான் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து வருகிறேன்.
தெலுங்கானா கிடைக்காவிட்டால் உயிர் துறப்பேன். எனக்கு மரணம் பற்றி துளி அளவு கூட பயம் கிடையாது. ஒன்று தனி மாநில வெற்றி ஊர்வலம் நடக்க வேண்டும். இல்லாவிட்டால் எனது இறுதி ஊர்வலம் நடைபெற வேண்டும்.
நான் இறந்தாலும் வரலாற்றில் தெலுங்கானாவுக்காக இறந்தேன் என்ற முத்திரை பதிக்கப்படும். என் உடல்நிலை பற்றி குடும்பத்தினர் மிகவும் கவலைப்படுகிறார்கள். என் அருகே வந்து அழுது கொண்டிருக்கிறார்கள். என் மகள் கவிதா அரைமணி நேரத்திற்கு ஒருதடவை என்னை வந்து பார்த்து கண்ணீர் வடிக்கிறாள்.
அவளிடம் நான், தெலுங்கானா மக்களின் நலனுக்காகத்தான் இந்த முடிவை எடுத்துள்ளேன். நீ அடிக்கடி என் அருகே வந்து அழுதால் என மனநிலை மாறிவிடும். தயவு செய்து இனி இங்கு வராதே என்று கூறி விட்டேன்.
நான் உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும் என்றால் முதல்வர் ரோசையா சட்ட சபையில் தனி தெலுங்கானா மாநிலம் அமைப்பது பற்றிய மசோதா தாக்கல் செய்வது பற்றி உறுதிமொழி அளிக்க வேண்டும். இல்லை என்றால் நான் எக்காரணத்தை கொண்டும் உண்ணாவிரதத்தை கைவிட மாட்டேன் என்றார்.
இந்த நிலையில் இன்று உஸ்மானியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 100 மாணவர்கள் ராவை சந்தித்து உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு கோரிக்கை விடுத்தனர்.
ஆனால் அதை ஏற்க ராவ் மறுத்து விட்டார். இப்போது இல்லாவிட்டால் எப்போதும் கிடையாது. போராட்டம் தொடரும் என்று கூறி விட்டார்.