வேதாரண்யம் விபத்து: தலைமறைவான வேன் டிரைவர் சரண்
வேதாரண்யம்: வேதாரண்யம் அருகே பள்ளிக் குழந்தைகள் மற்றும் ஆசிரியை பரிதாபமாக உயிரிழந்த விபத்திற்குக் காரணமான, தலைமறைவான வேன் டிரைவர் நாகை கோர்ட்டில் சரண் அடைந்துள்ளார்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள கரியாப்பட்டினம் தேவி மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி மாணவ, மாணவிகள் சென்ற வேன் கடந்த 3ம் தேதி கத்திரிப்புலம் அருகே குளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 9 பள்ளிக் குழந்தைகள் ஒரு ஆசிரியை பலியானார்கள்.
வேனை ஒட்டி வந்த நாகக்குடையான் கிராமத்தை சேர்ந்த டிரைவர் மகேந்திரன் (25) தலைமறைவானார். இவர் செல்போன் பேசியபடியே வேனை ஓட்டி வந்ததால்தான் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
அவரை போலீசார் தேடிவந்த நிலையில், மகேந்திரன் நேற்று நாகப்பட்டினம் ஜுடிசியல் மாஜிஸ்திரட் கோர்ட்டில் சரணடைந்தார்.
அவரை 15 நாள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து மகேந்திரனை திருச்சி மத்திய சிறைக்கு போலீசார் கொண்டு சென்றனர்.