ஓய்வு பெறப் போவதாக கருணாநிதி சொல்வது நாடகம்- சு.சாமி
இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சர்வதேச விமான நிலையம் என்று பெயர் சூட்டுவதற்கான முயற்சிகளை நான் மேற்கொண்டேன். அதற்கு மாநில அரசின் ஒப்புதலை மத்திய அரசு கேட்டது.
அப்போது தமிழக முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் தமிழ்நாட்டில் பொது கட்டிடங்களுக்கு எந்த அரசியல் தலைவர்களின் பெயர்களையும் சூட்டுவது இல்லை என்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார். தேவர் சமுதாயத்தில் பிறந்த ஓ. பன்னீர்செல்வம் இதற்காக மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.
இப்போதுள்ள திமுக அரசு மதுரை விமான நிலையத்திற்கு தேவர் பெயர் சூட்டுவதற்கு ஆட்சேபனை இல்லை என்று உடனடியாக மத்திய அரசுக்கு கடிதம் எழுத வேண்டும்.
கருணாநிதி ஒப்புதல் தராவிட்டால் பிஜேபி, ஆர்.எஸ்.எஸ்., விஎச்பி, இந்து முன்னணி மற்றும் தேவர் அமைப்புகளை ஒருங்கிணைத்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இதனை வலியுறுத்தி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாளான ஜனவரி 23ந் தேதி மதுரையில் பொதுக்கூட்டம் நடத்தப்படும்.
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் மத்திய அமைச்சர் ராசா 50 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக ஊழல் செய்திருக்கிறார். அவர் மீது டெல்லி உயர்நீதிமன்றத்தில் வரும் 15ந் தேதி ரிட் மனு தாக்கல் செய்ய உள்ளேன். இது பற்றி பிரதமருக்கும் நான் கடிதம் எழுதியிருக்கிறேன். ராசா மீது பிரதமர் நடவடிக்கை எடுக்காவிட்டால் இவ்வழக்கில் அவரது பெயரையும் சேர்ப்பதாக நான் குறிப்பிட்டுள்ளேன்.
30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்து கோயில்கள் முகாலய மன்னர்கள் காலத்தில் இடிக்கப்பட்டு அவை மசூதிகளாக கட்டப்பட்டன. இந்து கோயில்கள் போல மசூதிகள் என்பவை தொடர் வழிபாட்டு தலங்கள் அல்ல. அவர்கள் எங்கும் நமாஸ் செய்யலாம்.
ஆனால் இந்து கோயில்கள் பாரம்பரிய ஆகம விதிப்படி எழுப்பப்படுபவை. எனவே ராமர் கோயில் உள்ள அயோத்தி, சிவன் கோயில் உள்ள காசி, கிருஷ்ணர் கோயில் உள்ள மதுரா ஆகிய இந்துக்களின் முக்கியமான புண்ணிய தலங்களை இஸ்லாமியர்கள் தாமாகவே முன்வந்து இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும். அப்போது தான் நாட்டில் சகோதரத்துவம் நிலவும்.
பாபர் மசூதி இடிக்கப்பட்ட 6ந் தேதி ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமிய அமைப்புகள் மறியல் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது முறையற்ற செயலாகும். இது தொடர்ந்து நீடித்தால் அதனை மக்கள் சகித்துக்கொள்ள மாட்டார்கள் என்றார் சாமி.