விலைவாசி: போராட்டம் நடத்திய தா.பாண்டியன் கைது
சென்னை: விலைவாசி உயர்வை கண்டித்து போராட்டம் நடத்திய இந்திய கம்யூனி்ஸ்ட் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் கைது செய்யப்பட்டார்.
விலைவாசி உயர்வை கண்டித்தும், உணவுப் பொருட்களின் ஆன்-லைன் வர்த்தகத்தை ரத்து செய்யக் கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் இன்று தமிழகம் முழுவதும் 250 மத்திய- மாநில அரசு அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டம் நடந்தது.
உணவுப் பதுக்கலை தடுக்க வேண்டும், கள்ள உணவு பதுக்கல் மற்றும் கறுப்பு பண பதுக்கலில் ஈடுபடுபவர்களை கைது செய்ய வேண்டும், பொது வினியோக திட்டத்தை பலப்படுத்த வேண்டும், மக்களின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளையும் வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடந்தது.
சென்னையில் பனகல் மாளிகை, குறளகம், வடபழனி நூறடி ரோடு, அம்பத்தூர், திருவொற்றியூர், ஆவடி, பல்லாவரம் உட்பட சென்னை மற்றும் புறநகரில் 9 இடங்களில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
பனகல் மாளிகை அருகே நடைபெற்ற போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில பொதுச் செயலாளர் த.பாண்டியன், மார்க்சிஸ்ட் கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் அ.சௌந்தர்ராஜன் ஆகியோர் தலைமையில் நூற்றுக்கணக்கானோர் போராட்டத்தில் பங்கேற்றனர். அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
வடசென்னை குறளகம் எதிரே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் மகேந்திரன், மார்க்சிஸ்ட் தலைவர் ராமகிருஷ்ணன் தலைமையிலும், போராட்டம் நடைபெற்றது. அவர்களும் கைது செய்யப்பட்டனர்.
சென்னையில் மட்டும் சுமார் 1,500 பேர் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய தா.பாண்டியன்,
விலைவாசி உயர்வுக்கு மத்திய, மாநில அரசுகளின் தவறான கொள்கைகளே காரணம். நாட்டு மக்களைப் பற்றி மத்திய- மாநில அரசுகள் கண்டுகொள்ளவில்லை.
நாங்கள் நியாயத்துக்காக போராடுகிறோம் எதற்காக எங்களை கைது செய்கிறார்கள் என்று தெரியவில்லை. அதை அரசிடம் தான் கேட்க வேண்டும் என்றார்.