கல்பாக்கம், ஏர்போர்ட்டில் 24 மணிநேர உஷார் நிலை அமல்
சென்னை: சென்னையில் விமான நிலையம் மற்றும் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் 24 மணி நேரமும் தொடர் உச்சக்கட்ட பாதுகாப்புத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, குறைந்தபட்சம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பணியில் இருக்கும் சமயத்தில், அதே எண்ணிக்கையிலான போலீசார் அவசரகால நடவடிக்கைக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
அதே எண்ணிக்கையிலான போலீசார் ஓய்விலும் இருப்பர். இவர்கள் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். ஏதாவது அசம்பாவிதம் ஏற்படும் சமயத்தில் 3 பிரிவு போலீசாரும் ஒரே நேரத்தில் களத்தில் இறங்குவார்கள்.
வழக்கமாக, டிசம்பர் 6, 26/11 போன்ற குறிப்பிட்ட நாட்கள் மற்றும் அசம்பாவித சமயங்களில் கூடுதல் பாதுகாப்பு படையினர் வரவழைக்கப்படுவார்கள். தற்போது இதுபோன்ற நாட்கள் அதிகரிப்பதுடன், அடிக்கடி வெடிகுண்டு மிரட்டல் போன்ற சம்பவங்களும் நிகழந்து கிட்டதட்ட எப்போது கூடுதல் பாதுகாப்புப் படையினருக்கு வேலை இருந்து கொண்டே இருக்கிறது.
குறிப்பாக விமான நிலையங்கள் இதுபோன்ற நிலைமையை எதிர்கொள்கின்றன. இதற்கிடையே, சென்னை விமான நிலையம், கல்பாக்கம் அணுமின் நிலையம் உள்ளிட்ட முக்கியமான இடங்களுக்கு, உச்சக்கட்ட பாதுகாப்பு போடுவதற்கு மத்திய உளவுத்துறை அறிவுறுத்தி உள்ளது.
அதனால், கல்பாக்கம் அணுமின் நிலையத்திலும், சாதாரண நபர்கள் நுழைந்து விடாதபடி தொடர் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதன்படி வழக்கத்தை விட 2 மடங்கு போலீசார் கூடுதலாக பாதுகாப்பு பணிக்காக அழைக்கப்பட்டுள்ளனர்.
கடல் வழி அச்சுறுத்தலை சமாளிக்கும் பொறுப்பில் சிறப்பு அதிவேக படகுகள் ரோந்து சுற்றி வருகின்றன. தீவிரவாதிகளின் தாக்குதலை தடுக்க எப்போதும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர்.