மனைவிக்கு எச்ஐவி கலந்த ரத்த ஊசி போட்ட கணவன்
வெலிங்டன் : எச்ஐவி வைரஸ் அடங்கிய ரத்தத்தை, ஊசி மூலம் தூங்கிக் கொண்டிருந்த தனது மனைவிக்கு செலுத்தியுள்ளார் நியூசிலாந்து கணவர் ஒருவர்.
நியூசிலாந்தில் இப்படி ஒரு சம்பவம் நடப்பது இதுவே முதல் முறையாகும். அந்த நாட்டுச் சட்டப்படி அந்த கணவருக்கு 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைக்கும் என்கிறார்கள்.
அவரது பெயர் விவரம் வெளியிடப்படவில்லை. அந்த நபருக்கு வயது 35. கடந்த 2004ம் ஆண்டு நடத்தப்பட்ட ரத்தப் பரிசோதனையில் அவருக்கு எய்ட்ஸ் இருப்பது தெரிய வந்தது.
ஆனால் அவரது மனைவிக்கும், இரு குழந்தைகளுக்கும் இந்தப் பாதிப்பு தொற்றவில்லை. இருப்பினும் தனது இரு குழந்தைகளின் நலனுக்காக கணவருடன் தொடர்ந்து வாழ அந்தப் பெண் முடிவு செய்தார். ஆனால் கணவருடன் உடலுறவுக்கு மட்டும் தீர்மானமாக மறுத்து விட்டார்.
இது அவரது கணவருக்கு வேதனையை ஏற்படுத்தியது. மனைவி தன்னுடன் பழையபடி இருக்க வேண்டும் என்று நினைத்த அவர், தூங்கிக் கொண்டிருந்தபோது அவரது உடலில் தையல் ஊசியால் தனது ரத்தத்தை எடுத்து மனைவியை இரண்டு முறை குத்தி செலுத்தி விட்டார்.
தூங்கிக் கொண்டிருந்ததால், இது அவரது மனைவிக்குத் தெரியவில்லை. நான்கு மாதங்களுக்குப் பின்னர் ஒரு பரிசோதனைக்காக மருத்துவமனைக்குச் சென்றபோது அவருக்கு எச்ஐவி பாதிப்பு இருப்பதாக தெரிவித்தனர் டாக்டர்கள்.
அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண், கணவரிடம் சண்டை போட்டுள்ளார். இதையடுத்து நான்தான் ரத்தத்தை செலுத்தினேன் என்று ஒப்புக் கொண்டார் கணவர். இதையடுத்து போலீஸில் புகார் கொடுக்கவே தற்போது போலீஸார் மனைவிக்கு எச்ஐவி ரத்தத்தை செலுத்திய கணவரை கைது செய்துள்ளனர்.