5 விமானங்களுக்கு தடை: பெரும் நெருக்கடியில் பாரமவுண்ட் ஏர்வேஸ்!
பாரமவுண்ட் நிறுவனத்தின் 5 விமானங்களை சிவில் விமான போக்குவரத்துத் துறை இயக்குநர் அலுவலகம் தடை செய்து அறிவித்துள்ளதே இதற்குக் காரணம்.
பாரமவுண்ட் நிறுவனத்திடம் மொத்தம் 6 விமானங்கள் உள்ளன. இவற்றில் இரண்டினை ஏற்கெனவே தடை செய்துவிட்டது சிவில் விமான போக்குவரத்துத் துறை இயக்குநர் அலுவலகம்.
இப்போது மேலும் மூன்று விமானங்களும் பறக்கத் தடை விதிக்கப்பட்டுவிட்டதால், எஞ்சியிருக்கிற ஒரேயொரு விமானத்தை வைத்துக் கொண்டு அனைத்து செக்டார்களையும் சமாளிக்க வேண்டும். அது சிரமம் என்பதால், இப்போது 14 விமான சர்வீஸ்களை பாரமவுண்ட் ரத்து செய்துள்ளது.
ரத்து செய்யப்பட்ட விமான சர்வீஸ்கள்:
சென்னை - கோவை, கோவை - சென்னை, சென்னை - அகமதாபாத், அகமதாபாத்-சென்னை, சென்னை - கொல்கத்தா, கொல்கத்தா - சென்னை, சென்னை - கொச்சி (17-435), கொச்சி - சென்னை (17-436), சென்னை-கொச்சி (17-469), கொச்சி - சென்னை (17-470), சென்னை - திருவனந்தபுரம், திருவனந்தபுரம் - சென்னை, சென்னை - டெல்லி, டெல்லி - சென்னை.
தடை செய்யப்பட்டுள்ள பாரமவுண்டின் இந்த 5 விமானங்களும் பறக்க தடைவிதிக்கப்பட்டுள்ளதாக அனைத்து விமான தரைக்கட்டுப்பாட்டு மையங்களுக்கும் தகவல் அனுப்பப்பட்டுள்ளது.
இதனால் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது பாரமவுண்ட் ஏர்வேஸ்.
லண்டனைச் சேர்ந்த ஜிஇ கம்ர்சியல் ஏவியேசன் சர்வீஸஸ் (GECAS) நிறுவனத்துடன் ஏற்பட்ட மோதல் காரணமாக பாரமவுண்ட் இந்த சிக்கலில் மாட்டியுள்ளது.
இந்த நிறுவனம் தான் பாரமவுண்ட் ஏர்வேசுக்கு விமானங்களை குத்தகைக்கு கொடுத்திருந்தது. இதற்காக 5 மில்லியன் டாலர்களை டெபாசிட்டாகவும், இன்னொரு 10 மில்லியன் டாலர்களை பராமரிப்புக் கட்டணமாகவும் பாரமவுண்ட் ஏர்வேஸ் அந்த நிறுவனத்திடம் கட்டியிருந்தது.
இதில் 10 மில்லியன் டாலர் பராமரிப்புக் கட்டணத்தை பாரமவுண்ட் திருப்பிக் கேட்டதால் இரு நிறுவனங்கள் இடையே பிரச்சனை மூண்டது. இதையடுத்து பாரமவுண்ட் நிறுவன விமானங்களின் லைசென்ஸ் ரத்து செய்யுமாறு அந்த நிறுவனம் இந்திய விமானப் போக்குவரத்துத்துறைக்கு கோரிக்கை விடுத்தது.
இந் நிலையில் GECAS நிறுவனத்துக்கு எதிராக லண்டன் நீதிமன்றத்தில் பாரமவுண்ட் ஏர்வேஸ் தாக்கல் செய்த வழக்கில் பாரமவுண்டுக்கு சாதகமாக தீர்ப்பு வந்துள்ளதாகத் தெரிகிறது. இதனால் தனது விமானங்களுக்கு இன்று மீண்டும் லைசென்ஸ்கள் கிடைத்துவிடும் என்று பாரமவுண்ட் ஏர்வேஸ் கருதுகிறது.
இதனால் இன்று முதல் மீண்டும் தனது முழு சேவையை அந்த நிறுவனம் தொடங்கலாம் என்று தெரிகிறது.