ரூ.1000க்கு குடிநீர் சுத்திகரிப்பு கருவி: டாடா அறிமுகம்!
மும்பை: ரூ 1 லட்சத்துக்கு நானோவை அறிமுகப்படுத்தி கார் புரட்சி செய்த டாடா நிறுவனம் அடுத்து குறைந்த விலை கொண்ட குடிநீர் சுத்திகரிப்பு சாதனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஸ்வாச் என்ற பெயரில் விற்பனைக்கு வந்துள்ள இந்த சாதனத்தின் விலை ரூ. 1000.
தண்ணீரில் உள்ள பாக்டீரியாக்களையும், வைரஸ்களையும் அழித்து சுத்தமான குடிநீர் வழங்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள சுத்திகரிப்பு கருவி நானோ தொழில் நுட்பத்தில் நெல் உமியை அழுத்தி, வெள்ளி முலம் பூசப்பட்ட உருளையில் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் தண்ணிர் மேல் நோக்கி சென்று சுத்தரிகரிக்கப்படுகிறது.
இது குறித்து டாடா சன்ஸ் நிர்வாக இயக்குநர் ஆர்.கோபாலகிருஷ்ணன், டாடா கெமிக்கல்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி ஆர்.முகுந்தன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியது:
"டாடா கெமிக்கல்ஸ், டாடா கன்சல்டன்ஸி, டைட்டன் ஆகிய நிறுவனங்களின் முயற்சியால், பூனாவில் உள்ள டாடா ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தில் குடிநீர் சுத்திகரிப்பு சாதனம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதற்கு போட்டியாக வேறு குடிநீர் சுத்திகரிப்பு சாதனம் இல்லை. இந்த தொழில் நுட்பத்தில் வேறு குடிநீர் சுத்திகரிப்பு சாதனம் இல்லை. இது இயங்குவதற்கு மின்சாரம் தேவையில்லை.
இதை தயாரிப்பதற்கு ஹால்டியாவில் தொழிற்சாலை நிறுவப்படும். இங்கு பத்து இலட்சம் குடிநீர் சுத்திகரிப்பு சாதனங்கள் தயாரிக்கப்படும்.
இந்த ஆலை அடுத்த சில மாதங்களில் மாதங்களில் மேலும் பத்து இலட்சம் குடிநீர் சுத்திகரிப்பு சாதனம் தாயரிக்கும் வகையில் விரிவுபடுத்தப்படும். இந்த தொழிற்சாலைக்காக ஏற்கனவே ரூ.20 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. அடுத்த ஐந்து வருடங்களில் மேலும் ரூ.100 கோடி முதலீடு செய்யப்படும்..", என்றனர்.
முதலில் மகாராஷ்ட்ரா மாநிலத்தில் மட்டும் விற்பனைக்கு வரும் இந்த சாதனம், படிப்படியாக மற்ற மாநிலங்களுக்கும் விரிவாக்கப்படும்.