பெட்ரோ கார்டுகள்.. கார்பன் ரைட்டர்..போலி ஏடிஎம் கார்டுகள்.. கோடிக்கணக்கில் கொள்ளை
இதில் முக்கிய குற்றவாளியான இலங்கை அரசு அதிகாரி ஒருவர் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
வாகன சோதனை:
பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு கூடுவாஞ்சேரி போலீஸ் பெண் சப்-இன்ஸ்பெக்டர் தரணி, போலீசாருடன் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தார்.
அப்போது தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு நோக்கி சென்ற ஒரு ஆட்டோவை போலீசார் நிறுத்தியபோது அது நிற்காமல் சென்றது. இதையடுத்து ஆட்டோவை போலீசார் துரத்திப் பிடித்தனர்.
அதில் இருந்த 4 வாலிபர்களிடம் சோதனை நடத்தியதில் ஒரு லேப்டாப் மற்றும் ஏராளமான ஏ.டி.எம்.
டெபிட் கிரெடிட் கார்டுகள் இருந்தன.
இதையடுத்து தனிப் படையிடம் அவர்கள் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களிடம் போலீசார் தனித் தனியே விசாரணை நடத்தியபோது அவர்கள் இலங்கை வவுனியாவைச் சேர்ந்த ராஜேந்திரன் (47), கோனேஸ்வரன் (34), ராஜரத்தினம் (43), தர்ம நிஷாந்தன் (19) என்று தெரிய வந்தது.
இவர்கள் வெளிநாடுகளில் வசிப்போரின் வங்கிக் கணக்குகள் மற்றும் ஏ.டி.எம் கார்டுகளின் ரகசிய குறியீட்டு எண்களைத் தெரிந்து கொண்டு, போலி ஏ.டி.எம். கார்டுகள் தயாரித்து, கோடிக்கணக்கில் கொள்ளை அடித்துள்ளது தெரியவந்தது.
ராஜேந்திரன் அளித்த வாக்குமூலத்தில்,
நான் ஒரு வருடம் முன் சுற்றுலா விசா மூலம் தமிழகம் வந்தேன். சென்னையில் என் உறவினரான ராஜரத்தினம் வீட்டில் தங்கி இருந்தேன். ஏற்கனவே பல ஆண்டுகளுக்கு முன் வவுனியாவில் இருந்து வந்து, தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் தங்கி இருந்த நண்பர்களான கோனேஸ்வரன், தர்ம நிஷாந்தன் ஆகியோருடன் அடிக்கடி தொலைபேசியில் பேசுவேன். எங்கள் யாருக்குமே வேலை கிடைக்கவில்லை.
இலங்கை அதிகாரிக்குத் தொடர்பு:
அப்போது வவுனியா மாவட்டத்தில், அரசு விளையாட்டுத் துறையில் அதிகாரியாக உள்ள தன்ராஜ் (35) என்பவரின் நட்பு கிடைத்தது.
அவர் போலி ஏ.டி.எம். கார்டுகள் மூலம் ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுப்பது குறித்து எங்களுக்குச் சொல்லித் தந்தார்.
இதைச் சொல்லித் தர தமிழ்நாட்டிற்கு வந்தார். எப்படி போலி கார்டுகள் தயாரிப்பது என்பதை சொல்லித் தந்துவிட்டு சென்றார்.
தன்ராஜ் அனுப்பும் ரகசிய குறியீட்டு எண்ணை வைத்து பணம் எடுத்தால், அதி்ல் ஒரு பகுதியை அவர் சொல்லும் நபர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தார். அதை நாங்கள் ஒப்புக்கொண்டோம்.
இதையடுத்து நான், ராஜரத்தினம், கோனேஸ்வரன், தர்ம நிஷாந்தன் பெருங்களத்தூர் அருகே சதானந்தபுரம் பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு பிடித்தோம்.
பின்னர் போலி ஏ.டி.எம். கார்டுகள் தயாரிக்க லேப்டாப், கார்பன் ரைட்டர் உள்ளிட்ட கருவிகளை வாங்கினோம்.
ஏடிஎம் கார்டுகளாக மாற்றப்பட்ட பெட்ரோ கார்டுகள்:
இதையடுத்து தன்ராஜ் ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மலேசியா, இங்கிலாந்து, கனடா உள்பட பல்வேறு நாடுகளில் உள்ளவர்களின் வங்கி கணக்குகளின் ரகசிய குறீயிட்டு எண்களை எங்களுக்கு இ மெயில் மூலம் அனுப்பினார்.
நாங்கள் 30க்கும் மேற்பட்ட பெட்ரோ கார்டுகளை (பெட்ரோல் நிலையங்களில் தரப்படும் கார்டுகள்) வாங்கி சேகரித்தோம். அந்த கார்டுகளின் பின்புறம் இருக்கும் மேக்னடிக் டேப்பை அழித்துவிட்டு கார்பன் ரைட்டர் மூலம் அந்த இடத்தில் தன்ராஜ் அனுப்பிய வெளிநாட்டினரின் கார்டுகளின் ரகசிய குறியீடுகளைப் பதிவு செய்தோம்.
வாரத்துக்கு 4,5 கார்டுகளின் விவரங்களை தன்ராஜ் அனுப்புவார். நாங்களும் 4,5 போலி ஏ.டி.எம். கார்டுகளை தயார் செய்வோம். இதை வைத்து ஏடிஎம் மையங்களில் பணம் எடுத்து வந்தோம்.
கடந்த 7 மாதமாக பல கோடி வரை பணம் எடுத்துள்ளோம். அதில் ஒரு பகுதியை தன்ராஜ் சொல்லும் நபர்களிடம் ஒப்படைத்து வந்தோம் என்று கூறியுள்ளார் ராஜேந்திரன்.
பிடிபட்ட நான்கு பேரிடம் இருந்தும் ரூ.9 லட்சம் பணம், செல்போன்கள், 50 போலி ஏ.டி.எம். கார்டுகள், ஒரு லேப்டாப், இலங்கை பாஸ்போர்ட்டுகள் மற்றும் டிரைவிங் லைசென்ஸ், கார்பன் ரைட்டர், ஆட்டோ ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
4 பேரையும் போலீசார் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
முக்கிய குற்றவாளியான இலங்கை விளையாட்டுத்துறை அதிகாரி தன்ராஜ் தலைமறைவாக உள்ளார். அவர் இப்போது தமிழகத்தில் இருப்பதாகத் தெரியவந்துள்ளதால் அவரைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் அவர் குறித்த விவரங்கள் இலங்கை போலீசாருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளன.