உ.பி. - நள்ளிரவில் ஜாகிங் செய்த ராகுல் காந்தி!
இந்தியாவின் தகுதி வாய்ந்த பிரம்மச்சாரிகளி்ல் ஒருவரான ராகுல் காந்தி மக்கள் நலனில் மட்டுமல்லாமல் உடல் நலனிலும் ஒரு கண் வைத்துக் கொள்ளத் தவறுவதில்லை.
தினசரி உடற்பயிற்சி மேற்கொள்ள அவர் மறப்பதில்லை. எந்த இடத்தில் இருந்தாலும் அந்த இடத்தின் வசதிக்கேற்ப உடற்பயிற்சியை அவர் மேற்கொள்ள மறக்க மாட்டார்.
நேற்று உ.பி. மாநிலம் ஹர்டோய் என்ற நகருக்கு விசிட் அடித்தார் ராகுல். பகல் முழுவதும் கட்சிப் பணிகள், மக்கள் சந்திப்பு என பிசியாக இருந்ததால் அவரால் நேற்று உடற்பயிற்சியை செய்ய முடியாமல் போனது.
இருந்தாலும் விடவில்லை ராகுல். நள்ளிரவில் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் ஜாகிங் மற்றும் உடற்பயிற்சி மேற்கொண்டார்.
ஹர்டோய் போலீஸ் குடியிருப்பில் உள்ள மைதானத்திற்குச் சென்ற ராகுல் அங்கு கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் ஜாகிங் செய்தார் என்கிறார் ஹர்டோய் காங்கிரஸ் தலைவர் அஜய் சிங்.
இதுகுறித்து அவர் கூறுகையில் ராகுல் காந்தியின் 'ஸ்டெமினா'வைப் பார்த்து ஆச்சரியப்பட்டுப் போய் விட்டோம். பகல் முழுவதும் கட்சியினருடன் அவர் செலவிட்டார். பின்னர் அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்திற்குச் சென்றார். இதனால் அவரால் உடற்பயிற்சி செய்ய முடியாமல் போய் விட்டது.
இதனால் இரவு 11.30 மணிக்கு அவர் போலீஸ் மைதானத்திற்கு வந்து ஜாகிங் செய்ய ஆரம்பித்தார். நள்ளிரவு 12.30 மணி வரை மைதானத்தை அவர் பல சுற்றுக்கள் சுற்றி வந்தார் என்றார்.
ராகுல் காந்தி உடற்பயிற்சி செய்வதை அறிந்து அங்கு பலர் கூடி விட்டனராம். இருப்பினும் கருப்புப் பூணைப் படையினரும், போலீஸாரும், அந்த மைதானத்தை சுற்றிலும் நின்று கொண்டு யாரையும் உள்ளே விடவில்லையாம்.
கிரவுண்டுக்கு உள்ளே ராகுல் காந்தி கடுமையாக உடற்பயிற்சி செய்து கொண்டிருக்க, வெளியே மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்தி யாரும் ஊடுறு விடாமல் பார்க்க பாதுகாப்பு படையினரும் கடுமையாக முயன்ரு கொண்டிருந்தனராம்.