தமிழக சிறைகளில் 10 கிலோ கஞ்சா பறிமுதல்
சென்னை: தமிழக சிறைகளில் கைதிகளிடம் இருந்து கடந்த 6 மாதங்களில் 10 கிலோ கஞ்சா, 156 செல்போன்கள், 85 சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தமிழகம் முழுவதிலும் உள்ள 9 மத்திய சிறைச் சாலைகளிலும் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இதில் பல்வேறு முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து சிறை துறை கூடுதல் டி.ஜி.பி. ஷியாம்சுந்தர் வெளியிட்ட தகவல்கள் வருமாறு:
கஞ்சா போன்ற போதை பொருட்களை சிறைக்குள் கடத்தி சென்றதாக கடந்த 6 மாதத்தி்ல் 82 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் சிறைக் காவலர்களும் அடக்கம். அதிக பட்சமாக புழல் 2வது சிறையில் கஞ்சா கடத்தியதாக 30 வழக்குகளும், மதுரையில் 15 வழக்குகளும் பதிவாகியுள்ளன.
கடந்த 6 மாதத்தில் மட்டும் தமிழக சிறைகளில் நடத்தப்பட்ட சோதனையில் கைதிகளிடம் இருந்து 156 செல்போன்கள், 85 சிம்கார்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதுதவிர சிறைகளில் நல்ல விஷயங்களும் நடக்கின்றன. கோவை மற்றும் புழல் சிறைகளில் 151 பேர் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுக்கு தயாராகி வருகிறார்கள். இவர்களுக்கு சிறையில் உள்ள பட்டதாரி கைதிகள் பாடம் நடத்தி வருகிறார்கள்.
தற்போது வீடியோ கான்பரன்ஸ் மூலம் சிறையில் இருக்கும் கைதிகளுக்கு காவல் நீட்டிப்பு செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு மொத்தம் 63 ஆயிரத்து 890 பேருக்கு வீடியோ கான்பரன்ஸ் மூலம் காவல் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் மொத்தம் 19 ஆயிரம் கைதிகள் பரோலில் சென்று வந்துள்ளனர். இதில் அதிகபட்சமாக தமிழக ஜெயில்களில் இருந்து 3500 பேர் பரோலில் சென்று வந்துள்ளனர்.