தெலுங்கானா போராட்டத்தில் மாவோயிஸ்டுகள் ஊடுறுவி விட்டனர் - போலீஸ்
இதுகுறித்து இன்று சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஆந்திர முதல்வர் ரோசய்யா, தெலுங்கானா மாநிலம் கோரி நடந்து வரும் போராட்டத்தில் சமூக விரோத சக்திகளும் கை கோர்த்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். மாணவர்களுடன் மாவோயிஸ்ட் நக்சலைட்டுகளும், அவர்களின் அனுதாபிகளும் இணைந்துள்ளதாக போலீஸார் கூறுகின்றனர்.
இதுகுறித்து அரசுக்கு வந்துள்ள தகவல்களின் அடிப்படையில் விசாரணை நடந்து வருகிறது என்றார்.
போலீஸ் ஐஜி அனுராதா கூறுகையில், தெலுங்கானா மாநிலக் கோரிக்கைக்கு மாவோயிஸ்டுகள் ஆதரவு முன்பிருந்தே உண்டு. ஜார்க்கண்ட் மாநிலத்தில் என்னென்ன பிரச்சினைள் ஏற்பட்டது என்பது அனைவருக்கும் தெரியும்.
தெலுங்கானா மாவோயிஸ்டுகளின் பிறந்த பூமியாகும். எனவே இங்கு தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள அவர்கள் முனைகின்றனர் என்றார்.
மேலும், உஸ்மானியா பல்கலைக்கழகத்திற்குள் புகுந்து மாணவ, மாணவியரை தடியடி நடத்தி அப்புறப்படுத்தியதற்கு முக்கிய காரணமாக போலீஸார் கூறுவது, அவர்களுக்குள் மாவோயிஸ்டுகள் ஊடுறுவியிருப்பதாக வந்த தகவலைத் தொடர்ந்தே அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மாணவர்களுக்குள் புகுந்து கொண்டு அவர்கள் மூலமாக வன்முறைச் செயல்களில் ஈடுபடுவதே மாவோயிஸ்டுகளின் நோக்கம் என்று காவல்துறை கூறுகிறது.
தெலுங்கானா பகுதியில் மாவோயிஸ்டுகள் மிகவும் வலுவான நிலையில் இருந்து வந்தனர். இருப்பினும் கடந்த சில ஆண்டுகளாக ஆந்திர போலீஸார் எடுத்த கடும் நடவடிக்கை காரணமாக இங்கு மாவோயிஸ்ட்கள் ஆதிக்கம் ஒழிக்கப்பட்டது.
டி.ஆர்.எஸ். குற்றச்சாட்டு...
இதற்கிடையே போராட்டத்தை திசை திருப்பும் வகையிலும், ஹைதராபாத்தில் தேவையில்லாத வன்முறையை ஏற்படுத்தி அந்தப் பழியை டி.ஆர்.எஸ். மீது போட முதல்வர் ரோசய்யாவுக்கு எதிரான காங்கிரஸார் முயல்வதாக தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதன் மூலம் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதிக்கும், ரோசய்யாவுக்கும் கெட்ட பெயரை ஏற்படுத்திட அவர்கள் முனைவதாகவும் டி.ஆர்.எஸ். தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
வன்முறையை கட்டவிழ்த்து விடுவதற்காக வெளியூர்களிலிருந்து ஆட்களைக் கொண்டு வருவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
இந்த நிலையில் இன்று சட்டசபையில் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு பேசுகையில், மக்களையும், மக்களின் உடமைகளையும் காப்பது அரசின் கடமையாகும் என்றார்.
ராவுக்கு நாடாளுமன்றம் கோரிக்கை...
இந்த நிலையில், இன்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தெலுங்கானா பிரச்சினை எதிரொலித்தது. கட்சி பாகுபாடின்றி அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் சந்திரசேகர ராவ் தனது உண்ணாவிரதத்தைக் கைவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
மேலும் மத்திய அரசு இந்த விவகாரத்தில் துரிதமாக செயல்பட வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.
பிரதமர் மன்மோகன் சிங்கும், ஆந்திர மாநில எம்.பிக்களுடன் தனியாக பேசினார். அப்போது சந்திரசேகர ராவின் உடல் நிலை குறித்து அவர் விசாரித்தார்.
ராஜ்யசபாவில் தெலுங்கானா பிரச்சினை தொடர்பாக பாஜகவினர் அமளியில் ஈடுபட்டதால் சபை ஒத்திவைக்கப்பட்டது.
மூத்த பாஜக தலைவர் அத்வானி லோக்சபாவில் பேசுகையில், சந்திரசேகர ராவின் உடல் நிலை குறித்து நாங்கள் கவலையுடன் உள்ளோம். அனைவரின் சார்பாகவும் அவர் தனது போராட்டத்தை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறேன் என்றார்.
ஐக்கிய ஜனதாதள தலைவர் சரத் யாதவ் கூறுகையில், ஆந்திர நிலைமை கொந்தளிப்பாக உள்ளது. மத்திய அரசு இது பெரிதாகி விடாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
பொறுமை காக்க வேண்டும்- சோனியா
இதற்கிடையே, ஆந்திர மாநில காங்கிரஸ் எம்.பிக்கள் இன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்துப் பேசினர். அப்போது அவர்களிடம் தெலுங்கானா விவகாரம் குறித்துப் பேசினார் சோனியா.
அனைவரும் பொறுமை காக்க வேண்டும் என்றும் இந்த விவகாரம் தொடர்பாக தான் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டிருப்பதாகவும் அவர் எம்.பிக்களை கேட்டுக் கொண்டார்.
தங்களுக்கு சோனியா காந்தி நல்ல முடிவைச் சொல்வார், தனி தெலுங்கானா அமைக்க சோனியா நடவடிக்கை எடுப்பார் என தெலுங்கானா பகுதி மக்கள் பெரிதும் நம்புவதாக எம்.பிக்கள் சோனியாவிடம் தெரிவித்தனர்.
அதற்கு அவர் தனக்கு பிரச்சினை குறித்துத் தெரியும் என்றும், நல்ல முடிவு எடுக்கப்படும் என்றும் அதுவரை அனைவரும் பொறுமை காக்க வேண்டும் என்றும் சோனியா கூறியதாக எம்.பிக்கள் தெரிவித்தனர்.