மீனாட்சி அம்மன் கோயிலில் தேங்காய்க்கு தடை: இந்து அமைப்புகள் எதிர்ப்பு
மதுரை: பாதுகாப்பை காரணம் காட்டி மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் தேங்காய் உடைப்பதற்கு தடை விதித்துள்ள அறநிலையத் துறைக்கு இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
மதுரையில் இந்து ஆன்மிக சமுதாய இயக்கங்கள் கூட்டம், மதுரை இந்து ஆலயப் பாதுகாப்புக் குழு அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஆலயப் பாதுகாப்புக் குழு மாநிலச் செயலர் நரசிம்மாசாரி தலைமை வகித்தார்.
கூட்டத்தில், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கோயில் பாதுகாப்பை காரணம் காட்டி தேங்காய் உடைப்பதற்குத் தடை விதித்துள்ளதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இதற்கான ஆட்சேபனை மனுக்களை அனைத்துப் பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் கோயில் நிர்வாகத்துக்கு அனுப்பிவைக்க வேண்டும் போன்ற பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த கூட்டத்தில் இந்து முன்னணியின் மதுரை மாவட்டத் தலைவர் பரமசிவம், பாஜக மாநிலப் பார்வையாளர் சுரேந்திரன், மாவட்டத் தலைவர் சசிராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.