For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாளை ஹைதரபாத் ஸ்தம்பிக்கும்-லட்சக்கணக்கான மாணவர்கள் முற்றுகை

By Staff
Google Oneindia Tamil News

ஹைதராபாத்: தனி தெலுங்கானா மாநிலம் கோரி ஆந்திர சட்டசபையை முற்றுகையிட லட்சக்கணக்கான மாணவர்கள் திட்டமிட்டுள்ளனர். இதனால் ஹைதராபாத் நகரமே ஸ்தம்பிக்கும் சூழல் உருவாகியுள்ளது.

ஆந்திர மாநிலத்தைப் பிரித்து தனி தெலுங்கானா மாநிலம் அமைக்கக் கோரி தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி தலைவர் சந்திரசேகர ராவ் இன்று 11வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

அவரது உடல்நிலை குறித்து நிஜாம் மருத்துவமனை இயக்குனர் பிரசாத ராவ் கூறுகையில்,

சந்திரசேகர ராவின் உடல் நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. அவரது உடலில் புரோட்டீன் அளவு குறைந்து வருகிறது. இந்த நிலை நீடித்தால் அவரது உயிருக்கே ஆபத்தாகி விடும்.

அவரது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைந்து வருகிறது. அவர் மிக சோர்வாகவும் பலவீனமாகவும் உள்ளார்.

எந்த நேரமும் அவருக்கு எதுவும் ஆகலாம். நாங்கள் எதுவும் சொல்ல முடியாது. எங்கள் கையில் எதுவும் இல்லை.

அவர் மருத்துவ சிகிச்சைக்கு ஒத்துழைக்க மறுக்கிறார். மருந்து, மாத்திரைகளை உண்ண மறுக்கிறார். திட உணவு உண்டால் தான் அவரது உடலுக்கு நல்லது என்றார்.

இந் நிலையில் தெலுங்கானா கோரிக்கைக்கு ஆதரவாக டிஆர்ஸ் கட்சியினரும், மாணவர் அமைப்பினரும், வழக்கறிஞர்களும் பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தனி தெலுங்கானா மாநிலத்துக்கு தெலுங்கு தேசம், பாஜக, இடதுசாரிகள், பிரஜா ராஜ்யம் ஆகிய அனைத்து முக்கிய கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.

ஆனால் காங்கிரஸ் கட்சி இதுகுறித்து எந்த முடிவும் எடுக்க முடியாமல் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளது. கட்சியின் தெலுங்கானா பகுதி எம்எல்ஏக்களும் எம்பிக்களும் இந்தக் கோரிக்கைகையை ஆதரிக்க ஆரம்பித்துள்ளதால் முதல்வர் ரோசய்யா, தடுமாற ஆரம்பித்துள்ளார்.

இந்தப் பிரச்சனையில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு காங்கிரஸ் மேலிடத்திடம் கோரி வருகிறார்.

இந் நிலையில், தனி மாநிலம் அமைக்க ஆந்திர சட்டசபையில் இன்று தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று தெலுங்கானா மாணவர்கள் கூட்டு நடவடிக்கை கமிட்டி கூறியுள்ளது.

அப்படி தீர்மானம் நிறைவேற்றாவிட்டால், 10ம் தேதி (நாளை) தெலுங்கானா பகுதிகளில் உள்ள 10 மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான மாணவர்கள் திரண்டு வந்து ஆந்திர சட்டசபையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தப் போராட்டத்துக்கு 'சலோ அசெம்ப்ளி' என்று மாணவர்கள் பெயர் சூட்டினர். ஆனால், போலீசாரின் நிர்ப்பந்தத்தால், அதை 'சலோ அசெம்பிளி சாந்தி யாத்ரா' என்று பெயர் மாற்றியுள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபடுவதற்காக தெலுங்கானா பகுதியில் உள்ள 10 மாவட்டத்தை சேர்ந்த பல லட்சம் மாணவர்களும் ஹைதராபாத்தை நோக்கி படையெடுக்க தொடங்கிவிட்டனர். அவர்கள் தேவையான உணவுகளையும் தங்களுடனே எடுத்துச்செல்கிறார்கள். மொத்தம் 4 லட்சம் மாணவர்கள் சட்ட மன்றத்தை முற்றுகையிட திட்டமிட்டுள்ளனர்.

மாணவர்களின் இந்த முற்றுகை போராட்டத்தை முறியடிக்க ஆந்திர அரசு தீவிரமாக உள்ளது.

இது தொடர்பாக முதல்வர் ரோசய்யா, உள்துறை அமைச்சர் சபீதா இந்திரா ரெட்டி, டி.ஜி.பி. கிரீஷ் குமார், கண்காணிப்பு பிரிவு ஐ.ஜி. அனுராதா ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.

இதையடுத்து, தெலுங்கானா பகுதிகளில் உள்ள 10 மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இன்றும், நாளையும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கம்மம், நிஜாம் மாவட்டங்களில் 17ம் தேதி வரை இந்தத் தடை உத்தரவு அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்டசபைக்கு வெளியே 12 ஆயிரத்து 500 துப்பாக்கி ஏந்திய போலீஸாரும், துணை ராணுவப் படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் சட்டசபை உள்ள பகுதியில் இன்று மாலை 6 மணி முதல் நாளை மாலை 6 மணி வரை அங்கு 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கானா பகுதியில் மாலை 6 மணிக்கு மேல் பொதுமக்கள் நடமாடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் வரும் 19ம் தேதி வரை கல்லூரிகளை மூடவும் அரசு உத்தரவிட்டுள்ளது.

நாளைய மாணவர்கள் முற்றுகை போராட்டத்தை முறியடிக்க டெல்லியில் இருந்து 9 பட்டாலியன் மத்தியப் படைகள் ஹைதராபாத் விரைந்துள்ளன.

இந்நிலையில் இன்று ஆந்திர சட்டசபை இன்று காலை கூடிய ஒரு சில நிமிடங்களிலேயே டிஆர்எஸ் எம்எல்ஏக்களின் கடும் அமளி காரணமாக 15 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுவிட்டது.

தற்போதைக்கு தனி தெலுங்கானா அமைக்க சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றுவதில் அர்த்தமில்லை என முதல்வர் ரோசய்யா கூறியுள்ளார்.

டெல்லி விரைந்துள்ள ரோசய்யா, காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் பிரதமரையும் சந்தித்துப் பேசினார்.

பிரதமர் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம்:

இதைத் தொடர்ந்து தெலுங்கானா போராட்டம் தொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் தலைமையி்ல் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X