For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிரியாணி, கறி சோறு- தொண்டர்களை குளிர வைக்கும் கட்சிகள்

By Staff
Google Oneindia Tamil News

வந்தவாசி: கறிச்சோறு, சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி என்று வகை வகையாக சமையல் கலைஞர்களை வைத்து ஆக்கிப் போட்டு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும் தொண்டர்களை குளுகுளுவென வைத்துக் கொள்கின்றனவாம் முக்கிய கட்சிகள்.

திருச்செந்தூர், வந்தவாசி தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. இரு தொகுதிகளிலும் இப்போதைக்கு திமுக, அதிமுகவினரின் பிரசாரம்தான் படு வேகமாக இருக்கிறது.

இந்த களேபரத்தில் சிக்கிக் கொள்ளாமல் அமைதியான முறையில், மக்களை நேரில் சந்தித்து வாக்குகளை கோரி வருகின்றது தேமுதிக.

இந்த நிலையில் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுக்காகவும் பிரசாரம் உள்ளிட்ட தேர்தல் பணிகளைப் பார்த்துக் கொள்வதற்காக வெளியூர்களிலிருந்து பெரும் திரளான தொண்டர்கள் இரு தொகுதிகளிலும் குவிந்துள்ளனர். இதனால் இரு தொகுதிகளும் விழாக் கோலம் பூண்டு காணப்படுகிறது.

இரு கட்சிக்காரர்களும் படு மும்முரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர். இப்படி ஓடியாடி வேலை பார்க்கும் தொண்டர்களுக்கு ஆங்காங்கு சரியான முறையில் சாப்பாடு கிடைப்பதில் சிக்கலாகி விடுகிறதாம்.

இதையடுத்து வாடகைப் பாத்திரங்களை எடுத்து வந்து சமையல் கலைஞர்களை நியமித்து வகை வகையாக சமைத்துப் போட்டு தொண்டர்களை குஷிப்படுத்தி குளிப்பாட்டி வருகிறார்களாம் தேர்தல் பொறுப்பாளர்கள்.

சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, கறிச்சோறு என விதம் விதமாக சமையல் செய்து போட்டு தொண்டர்களின் வயிறையும், மனதையும் ஆற்றுப்படுத்தி வேலை வாங்குகிறார்களாம்.

வந்தவாசி தொகுதியில் இதன் காரணமாக சமையல்காரர்களுக்கு திடீர் கிராக்கி ஏற்பட்டுள்ளதாம். கையில வாசு, வாயில தோசை என்பதைப் போல உடனுக்குடன் சம்பளத்தையும் கட்சிக்காரர்கள் பட்டுவாடா செய்து விடுவதால் சமையல் செய்யும் வேலைக்கு சமையல்காரரர்கள் படையெடுத்து வருவதால் மற்ற விசேஷங்களுக்கு சமையல்காரர்கள் கிடைப்பது திண்டாட்டமாகியுள்ளதாம்.

உள்ளூர் சமையல்காரர்கள் போதிய அளவில் இல்லாததால் அக்கம் பக்கத்து ஊர்களைச் சேர்ந்த சமையல்காரர்களையும் வண்டி போட்டுக் கொண்டு இழுத்து வந்து சமைக்க விடுகிறார்களாம்.

தேர்தல் முடியும் வரை இத்தகைய கூத்துக்கள் சகஜம்தான் என்பதைப் போல வந்தவாசி வாக்காளர்களும் அமைதியாக இதை வேடிக்கை பார்த்து ரசித்துக் கொண்டுள்ளனர்.

உடன்குடி அதிமுக-திமுக மோதல்:

இந் நிலையில் தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி நகர திமுக செயலாளர் ராஜேந்திர சிங். இவர் திருச்செந்தூர் இடைத் தேர்தல் பணியாற்ற தண்டபத்து பகுதிக்கு காரில் வந்து கொண்டிருந்தார். அவருடன் பேரூராட்சி தலைவர் சாகுல் ஹமீது, விடுதலை சிறுத்தைகள் நகர செயலாளர் பாலன் ஆகியோர் வந்தனர்.

தண்டபத்து அருகே வரும்போது பரமன்குறிச்சியில் இருந்து உடன்குடி நோக்கி 5க்கும் மேற்பட்ட காரில் வந்த அதிமுகவினர் திடீரென திமுகவினர் கார் மீது கம்பால் தாக்குதல் நடத்தினர். தகவல் அறிந்து அஙகு வந்த டிஎஸ்பி ஸ்டான்லி தலைமையிலான போலீசார் இரு தரப்பினரிடமும் பேச்சு வார்த்தை நடத்தினார். பேச்சு நடைபெறும் போதே இரு தரப்பினரிடமும் மோதல் ஏற்பட்டது.

தாக்குதலில் 11க்கும் மேற்பட்ட கார்கள் சேதம் அடைந்தன. அதிமுக பிரமுகர்கள் மாதவன் பிள்ளை, செந்தில் குமார் ஆகியோர் காயம் அடைந்தனர். அவர்கள் நெல்லை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தண்டபத்து பகுதியில் பதற்றம் நிலவுவதால் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X