வாஜ்பாய் குறித்த காங் எம்பியின் அவதூறு பேச்சு- மன்னிப்பு கேட்டார் பிரதமர்
டெல்லி: முன்னாள் பிரதமர் வாஜ்யாப் மற்றும் பாஜக மூத்த தலைவர் அத்வானி குறித்து காங்கிரஸ் எம்.பி. பேனி பிரசாத் வர்மா அவதூறாகப் பேசியதற்காக இன்று நாடாளுமன்றத்தில் பிரதமர் மன்மோகன் சிங் மன்னிப்பு கேட்டார்.
நேற்று லோக்சபாவில் பேனி பிரசாத் வர்மா பேசுகையில், வாஜ்பாயையும், அத்வானியையும் கடுமையாக சாடிப் பேசினார். வாஜ்பாய் குறித்து அவர் பேசியது பெரும் புயலைக் கிளப்பியது. இதையடுத்து அவற்றை அவைக் குறிப்பிலிருந்து சபாநாயகர் மீரா குமார் நீக்கி உத்தரவிட்டார்.
அதேசமயம், அத்வானியை பாகிஸ்தானிலிருந்து ஓடி வந்த அகதி என்று குறிப்பிட்டு பேசியது பாஜகவினரிடையே பெரும் கொதிப்பை ஏற்படுத்தியது. வர்மா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரி அவர்கள் அமளியில் ஈடுபட்டனர்.
அதேபோல வாஜ்பாய் குறித்த கருத்துக்கு வர்மா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரி பாஜகவினருடன் சமாஜ்வாடிக் கட்சியினரும் போராட்டத்தில் குதித்தனர்.
இந்த நிலையில் இன்று லோக்சபாவில் வர்மா பேச்சுக்காக மன்னிப்பு கேட்பதாக பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார்.
இதுகுறித்து இன்றுலோக்சபா கூடியதும் அவர் எழுந்து, நேற்று நான் அவையில் இல்லை. இருப்பினும் இங்கு விரும்பத்தகாத நிகழ்வுகள் அரங்கேறியதை நான் அறிந்து கொண்டேன்.
எங்களது கட்சியைச் சேர்ந்த ஒரு உறுப்பினர், வாஜ்பாய் குறித்து கூறியுள்ளார். அவை தேவையற்ற கருத்துக்கள். எனது சார்பிலும், அரசு சார்பிலும் இதற்காக நான் சபையிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று கூறினார்.












Click it and Unblock the Notifications