அனிதா ராதாகிருஷ்ணன் மீது கொலை மிரட்டல் வழக்கு
திருச்செந்தூர்: திருச்செந்தூர் இடைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணனின் வீடு அருகே, அதிமுக தேர்தல் அலுவலகம் அமைப்பது தொடர்பாக இரு கட்சியினரிடையே மோதல் ஏற்பட்டது.
அதில் அதிமுகவினர் இருவர் படுகாயமடைந்தனர். 10 கார்களின் உடைக்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து இரு கட்சியினரும் மெய்ஞானபுரம் காவல் நிலையத்தில் ஒருவர் மீது ஒருவர் புகார் கொடுத்தனர்.
இதையடுத்து போலீசார் அனிதா ராதாகிருஷ்ணன் மீது சட்டவிரோதமாக கூடுவது, வழிமறிப்பது, தகாத வார்த்தைகளால் பேசுவது, கொலை மிரட்டல் விடுத்தது ஆகிய பிரிவுகளின் கீழ் இரு வழக்குகள் பதிவு செய்தனர்.
இதன்மூலம் அனிதா ராதாகிருஷ்ணன் மீது இதுவரை 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதே போல அதிமுகவினர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
திமுகவுக்கு ஸ்ரீதர் வாண்டையார் ஆகரவு
வந்தவாசி, திருச்செந்தூர் இடைத்தேர்தலில் தி.மு.க.வின் வெற்றிக்கு பாடுபடுவோம் என்று மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழகத்தில் தி.மு.க தலைவர் கலைஞர் தலைமையில் நல்லாட்சி தொடர்ந்திட வந்தவாசி, திருச்செந்தூர் இடைத்தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவு அளிக்கிறோம்.
தமிழகத்தை முன்னேற்றுவதற்காக, தி.மு.க வேட்பாளர்களை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய மூவேந்தர் முன்னேற்றக் கழகம் பாடுபடும்' என்று குறிப்பிட்டுள்ளார்.