கச்சத்தீவு: இந்திய அரசின் சர்வாதிகாரம்-விஜய்காந்த்
சென்னை: கச்சத்தீவை திரும்பப் பெற முடியாது என்று வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தடாலடியாக கூறியிருப்பது அதிர்ச்சி தரக் கூடியதாக உள்ளது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
கச்சத்தீவு பிரச்சினை முடிந்து போன விஷயம் என்றும், அதில் மறுபரிசீலனை செய்வது அல்லது கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்வது என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும், இந்திய அரசின் வெளியுறவு துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா டெல்லி மேல்-சபையில் நேற்றைய தினம் தடாலடியாக அறிவித்துள்ளது, அதிர்ச்சி தரக்கூடியதாகும்.
1974ம் ஆண்டு தமிழ்நாட்டு மக்களின் கருத்தைப் புறக்கணித்து, இந்திய அரசு கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது. 1976ம் ஆண்டு ஆளுநர் ஆட்சியின் போது தமிழ்நாட்டு மக்களின் நலனைப்பற்றி கவலைப்படாமல் கடலோர மீனவர்களின் மீன் பிடிக்கும் உரிமையை, இந்திய அரசு இலங்கைக்கு வாரிவழங்கியது.
இவற்றின் விளைவாக தமிழ்நாட்டை சேர்ந்த கடலோர மீனவர்கள், மீன்பிடித் தொழிலையே விட்டுவிடும் நிலைமைக்கு இன்று துரத்தப்பட்டுள்ளனர். அவர்களது வாழ்வுரிமையே பறிக்கப்பட்டு விட்டது. மேலும் மீன்பிடி தொழில் ஒழுங்குமுறைச் சட்டம் என்ற பெயரால் கடலோர மீனவர்களை இந்திய அரசு நசுக்க முற்பட்டுள்ளது.
மக்களின் கருத்துப்படி நடப்பது தான் ஜனநாயகம். ஆனால் 1974ல் இருந்து இன்றுவரை தமிழ்நாட்டு மக்களின் கருத்தை அறிந்தோ அல்லது தமிழக கடலோர மீனவர்களின் எண்ணங்களை கேட்டோ இந்திய அரசு இந்த ஒப்பந்தங்களைப் போடவில்லை.
தன்னிச்சையாக மக்களின் தலையிலே இதை சுமத்திவிட்டு, எந்த முகாந்திரமும் இல்லாமல் இன்று இந்த பொருந்தாத ஒப்பந்தங்களை மறுபரிசீலனை செய்ய முடியாது என்று திட்டவட்டமாக அறிவித்திருப்பது ஜனநாயக போர்வையில் இந்திய அரசு செயல்படுத்தும் சர்வாதிகாரத்தையே காட்டுகிறது.
இந்த ஒப்பந்தங்கள் போடுவதற்கு முன்னால், இந்தியாவுக்கும், இலங்கைக்கும் உள்ள கடற்பகுதியில் இருநாடுகளைச் சேர்ந்த மீனவர்களும் அமைதியாக மீன் பிடித்தொழிலில் ஈடுபட்டனர். இந்த ஒப்பந்தத்தின் மூலம் இன்றைக்கு மீனவர்கள் என்ற இனமே அழிந்துவிடும் நிலை ஏற்பட்டுள்ளது.
மனிதாபிமான அடிப்படையிலும், அண்டை நாட்டுடன் நல்லுறவு என்ற அடிப்படையிலும், சொந்த நாட்டு குடிமக்களின் வாழ்வுரிமைக்கும், பாதுகாப்புக்கும் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்ற அடிப்படையிலும், இந்த ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்வதே முறையாகும்.
தவறான ஒப்பந்தம் போடுவதைவிட, ஒப்பந்தம் போடாமல் இருப்பதே மேல் என்பார்கள். ஏற்கனவே போட்ட ஒப்பந்தத்தின் தீயவிளைவுகளை தமிழ்நாடு இன்று அனுபவித்து வருகிறது.
புதிதாக இப்பொழுது புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்போவதாக வெளியுறவு அமைச்சர் தெரிவிக்கிறார். குதிரை கீழே தள்ளியது மட்டுமல்லாமல், குழியும் பறித்த கதைதான் இது. பிரச்சினைகளை தீர்ப்பதற்குத்தான் ஒப்பந்தம் போடுவார்கள். ஆனால் இந்த ஒப்பந்தம், இல்லாத பிரச்சினைகளை இன்று உருவாக்கிவிட்டது என்று கூறியுள்ளார் விஜயகாந்த்.