கடையநல்லூர் - மர்மக் காய்ச்சலுக்கு 3வது உயிர்ப்பலி - மக்கள் பெரும் பீதி
கடையநல்லூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடும் சுகாதார கேடு நிலவி வருவதாலும், சில தினங்களுக்கு முன் பெய்த பருவ மழையின் தாக்கத்தாலும் பரவலாக பல்வேறு பகுதிகளில விஷ காய்ச்சல் வேகமாக பரவியுள்ளது.
இக்காய்ச்சல் தாக்குதலுக்கு ஆளானவர்கள் அரசு மருத்துவமனையிலும், தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் பேச்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்த குருசாமி மகன் அஜய் (6) கடந்த 6ம் தேதி மர்ம காய்ச்சலால் இறந்தான். 8ம் தேதி அதே பகுதியை சேர்ந்த மாடசாமி என்பவரது மகன் குணா (இரண்டரை) என்ற குழந்தையும் விஷ காய்ச்சல் தாக்கி பலியானான்.
இந்நிலையில் நேற்று அதே பகுதியை சேர்ந்த இசக்கி முத்து என்பவரது 12 வயது மகள் கிரிஜா வேல்விழி என்ற 7ம் வகுப்பு படிக்கும் மாணவியும் இக்காய்ச்சலுக்கு பலியாகியுள்ளார். கடையநல்லூரில் விஷ காய்ச்சலுக்கு 3 பேர் பலியாகியுள்ளதால் அப்பகுதியில் பீதி ஏற்பட்டுள்ளது.
நேற்று நெல்லை கலெக்டர் ஜெயராமன் கடையநல்லூர் அரசு மருத்துவமனைக்கு சென்று பார்வையிட்டு அதிகாரிகளிடமும், மருத்துவர்களிடம் விபரம் கேட்டறிந்தார்.
தொகுதிப் பக்கம் வராத பீட்டர் அல்போன்ஸ்...
கடையநல்லூரில் 3 குழந்தைகள் இறந்தது குறித்து தொகுதி எம்எல்ஏவான பீட்டர் அல்போன்ஸுக்கு கட்சி பிரமுகர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். அதற்கு பீட்டர் அல்போன்ஸ் சென்னையில் இருந்தவாறே மருத்துவ அதிகாரிகளிடம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார் என்று கூறப்படுகிறது.
3 பேர் பலியான நிலையிலும், நேரில் வராமல் போன் மூலமே டீல் செய்யும் எம்எல்ஏவின் செயல் மக்கள் மத்தியில் மேலும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது.
இன்று போராட்டம்...
இன்று கடையநல்லூர் பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இதேபோல, சங்கரன்கோவில் வடக்கு ரத வீதியை சேர்ந்த ஆவுடையப்பன் என்பவரும் நேற்று விஷ காய்ச்சல் தாக்கி பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது.