மாணவர்களின் மாபெரும் போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி - ராவ்
தனி தெலுங்கானா மாநிலம் அமைக்க வலியுறுத்தி இறுதிப் போராட்டமாக அறிவித்து சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தார் ராவ். இதையடுத்து தெலுங்கானா பிராந்தியம் முழுவதும் கொந்தளிப்பாகியது.
கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பின்னரும் கூட அவர் உண்ணாவிரதத்தை விடவில்லை. கடந்த 11 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வந்த அவரது உடல் நிலை மோசமடைந்தது.
இந்த நிலையில் நேற்று தனி தெலுங்கானா மாநிலத்தை அமைத்து பிரச்சினையை தீர்க்க மத்திய அரசு முடிவு செய்தது. முதல் கட்டமாக ஆந்திர மாநில சட்டசபையில், தீர்மானம் ஒன்றை கொண்டு வருமாறு முதல்வர் ரோசய்யாவுக்கு அது உத்தரவிட்டது.
இதையடுத்து சந்திரசேகர ராவ் தனது உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்டுள்ளதாக அறிவிப்பு வெளியானது.
அவருக்கு கட்சியின் கொள்கையாளர் ஜெயசங்கர் ஜூஸ் கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார். ஏராளமான கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அப்போது உடன் இருந்தனர்.
உண்ணாவிரத்தை சந்திரசேகர ராவ் கைவிட்டதைத் தொடர்ந்து அவரை தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து சிறப்பு வார்டுக்கு மாற்றியுள்ளனர்.
அதன் பின்னர் முதல்வர் ரோசய்யாவை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார் ராவ். அப்போது, தெலுங்கானா விவகாரத்தில் ஆக்கப்பூர்வமாக செயல்பட்டதற்காக ரோசய்யாவுக்கு அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
பி்ன்னர் சந்திரசேகர ராவை செய்தியாளர்கள் சந்தித்தனர்.
சோனியா, மன்மோகன் சிங்குக்கு நன்றி..
அப்போது செய்தியாளர்களிடம் ராவ் பேசுகையில்,
எங்களது நீண்டகால தெலுங்கானா தனி மாநில கோரிக்கையை மத்திய அரசு ஏற்று இருப்பது மகிழ்ச்சியான ஒன்று. தனி தெலுங்கானா தீர்மானத்தை கொண்டு வந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன்சிங், ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் இக்கோரிக்கையை பாராளுமன்றத்தில் எழுப்பிய எதிர்க்கட்சி தலைவர் அத்வானி, முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு, ஆகியோருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
தெலுங்கானா தனி மாநிலம் கிடைத்ததற்கு மாணவர்களின் போராட்டம்தான் காரணம். அவர்களுடன் சேர்ந்து போராடிய தெலுங்கானா கட்சி தொண்டர்கள், ஊழியர் சங்கங்கள், ஆசிரியர்கள், போன்றோருக்கும் நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன்.
என் உடல் நிலை சரியானதும் தெலுங்கானா பகுதியில் உள்ள 10 மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் செய்து அனைத்து மக்களுக்கும் நன்றி கூற திட்டமிட்டுள்ளேன் என்றார்.
முன்னதாக நேற்று பிற்பகல் திரவ மருந்துகளை எடுத்துக் கொள்ளவும், ரத்த பரிசோதனைக்கு உட்படவும், ஆன்டிபயாடிக் மருந்துகளை எடுத்துக் கொள்ளவும் சந்திரசேகர ராவ் சம்மதம் தெரிவித்தார்.
இதையடுத்து மருந்துகள் கொடுக்கப்பட்டன. ரத்தமும் பரிசோதிக்கப்பட்டது. சலைன் செலுத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து பிற்பகலுக்கு மேல் ராவின் உடல் நிலையில் லேசான முன்னேற்றம் ஏற்படத் தொடங்கியது.
ரத்தப் பரிசோதனையில் அனைத்தும் இயல்பாக இருப்பதாக தெரிய வந்துள்ளது.
மக்களை சந்தித்த ராவ்:
இந் நிலையில் 11 நாட்களுக்குப் பின் மருத்துவமனைக்கு வெளியே வந்த ராவ் அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான தெலுங்கானா பகுதி மக்களை சந்தித்தார்.
தன்னுடன் போராடிய மக்களுக்கு அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.