சூரியன் ஓய்வெடுப்பதா?- கருணாநிதி குறித்து ஜெகத் பயங்கர உருக்கம்!!
சென்னை: சூரியனே ஓய்வெடுக்கலாமா?. இனி மறந்தும் ஓய்வென்ற சொல்லை உச்சரிக்கக் கூடாது என என்று தமிழக முதல்வர் கருணாநிதிக்கு, மத்திய இணையமைச்சர் ஜெகத்ரட்சகன் உருக்கமான கவிதை மூலம் கோரிக்கை வைத்துள்ளார்.
பன்முகம் கொண்டவர் ஜெகத்ரட்சகன். அவரது கவிதைகள், கவிதை நடை அறிக்கைகள் அரசியல் உலகில் மிகப் பிரபலமாகி வருகின்றன.
அந்த வகையில், முதல்வர் கருணாநிதி அறிவித்த ஓய்வு குறித்து அதிர்ச்சியும், உருக்கமும் கலந்து ஜெகத்ரட்சகன் விடுத்துள்ள கவிதை அறிக்கை...
சூரியன் ஓய்வெடுப்பதா?
என் நெஞ்சத் திரையில் மிளிரும், உயிரோவியமே!,
ஒற்றை வரியில் சொல்லிவிட்டாய்; ஓய்வு என்று'
எந்தன் உயிருக்குள் ஓடுகின்றது, அமில நதி!
தலைவா!
நீ ஒன்றும் ஆசைக் குதிரை மீதேறி
அதிர்ஷ்டத்தில்-அரியாசனத்தில் அமர்ந்த தலைவன் அன்று;
உழைப்பு எனும் ஒற்றை உளிகொண்டு
தானே தன்னை செதுக்கிக் கொண்ட தமிழகத்தின் தங்க சுரங்கம்'
சுடர்விளக்கு ஓய்வெடுக்கலாம்; சூரியனுமா ஓய்வெடுப்பது?
கரைகள் ஓய்வெடுக்கலாம்; கடலுமா ஓய்வெடுப்பது?
மேகங்கள் ஓய்வெடுக்கலாம்; வானமுமா ஓய்வெடுப்பது?
ஒவ்வொரு நாளும் உன் முகத்தை, முரசொலி கடிதங்களிலும்,
குறளோவிய கருத்துக்களிலும் தரிசித்து வரும் தம்பிகள் எங்களிடம்,
ஓய்வென்று நீ சொன்னால் உதிரமும் ஒரு நொடி உறைந்து போகாதா? தங்கத் தலைவனே!
ஓயாத அலைகள்... நீ
நாங்கள் வெறும் பட்டங்கள் மட்டுந்தான்;
பட்டங்கள் பறப்பதிற்குரிய சூத்திரக் கயிறு, உன் சுண்டு விரலில் அல்லவா?
பின்னால் ஓடி வரும் வெறும் பெட்டிகள் நாங்கள்
முகவரியாய் முன்னால் செல்லும், நிரந்தர ரெயில் என்ஜின் நீ தானே!
சங்க காலத்திற்கு பின் உன் தங்க காலத்தில் தான் தமிழன் இதயத்திலிருந்து புன்னகை பூக்கின்றான்!
ஆனால், நீயோ ஓய்வு ஓலை வரைகின்றாய்!
அது கேட்டு தொட்டிலில் தூங்கும் பூஞ்சிட்டுக்கள் புலம்புதம்மா!
ஓலைக் குடிசையிருந்து ஏர்முனைகள் ஏங்குதம்மா!
இசை விழாக்களில் மீட்டிய வீணை எல்லாம் விம்முதம்மா!
அரசு அலுவலர்களின் கோப்புகள் கண்ணீரால் நனையுதம்மா!
உதயசூரியனின் ஒவ்வொரு கதிரையும் தன் உதிரத்தால் ஒளிவீசச் செய்த உத்தமத் தலைவரே!
உன் வாழ்வில் இனி மறந்தும் உச்சரிக்காதே ஓய்வென்ற ஒரு சொல் மட்டும்!