ஆந்திராவுக்குப் போக வேண்டாம்- அமெரிக்கர்களுக்கு யு.எஸ். எச்சரிக்கை
வாஷிங்டன்: ஆந்திராவில் குறிப்பாக தெலுங்கானா பகுதியில் பதட்டம் நிலவுவதால் ஆந்திராவுக்குப் பயணம் செய்வதை தவிர்க்குமாறு தனது நாட்டு குடிமக்களுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை சுற்றுலா எச்சரிக்கையை விடுத்துள்ளது.
தனித் தெலுங்கானா மாநிலக் கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளதால் இன்று நடக்கவிருந்த சட்டசபை முற்றுகைப் போராட்டத்தை வெற்றிப் பேரணியாக டி.ஆர்.எஸ். கட்சி மாற்றியுள்ளது.
இந்தநிலையில் அமெரிக்க வெளியுறவுத்துறை தனது நாட்டு குடிமக்களுக்கு ஒரு சுற்றுலா எச்சரிக்கையை விடுத்துள்ளது.
அதில், டிசம்பர் 10ம் தேதி ஆந்திராவில் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அப்போது போலீஸாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்படக் கூடிய வாய்ப்புகள் உள்ளன. இதனால் ஹைதராபாத் நகரில் பதட்டம் ஏற்படக் கூடிய வாய்ப்புகள் உள்ளன.
எனவே ஹைதராபாத் நகருக்கும், குறிப்பாக தெலுங்கானா பிராந்தியத்தில் உள்ள எந்த பகுதிக்கும் செல்வதை தவிர்க்க வேண்டும் என அமெரிக்கர்களுக்கு அந்த எச்சரிக்கை தெரிவிக்கிறது.
டிசம்பர் 31ம் தேதி வரை இந்த எச்சரிக்கை தகவல் அமலில் இருக்கும் எனவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.