தஞ்சையில் ஈழத்தமிழர் வாழ்வுரிமை மாநாடு- பழ.நெடுமாறன் அறிவிப்பு
மதுரை: ஈழத்தமிழர்களின் வாழ்வுரிமைக்கான உலகத் தமிழர் மாநாடு டிசம்பர் 26, 27ம் தேதிகளில் தஞ்சையில் நடைபெற உள்ளது என்று உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் கூறினார்.
மதுரையில் நிருபர்களை சந்தித்த பழ.நெடுமாறன் இதுகுறித்து கூறுகையில், 'ஈழத்தமிழர்களின் வாழ்வுரிமைக்கான உலகத் தமிழர் மாநாடு இம்மாதம் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் தஞ்சாவூரில் நடைபெற உள்ளது.
இந்த மாநாட்டில், மலேசிய இந்திய காங்கிரஸ் தலைவர் டத்தோ சாமிவேலு, பா.ம.க நிறுவனர் ராமதாஸ், ம.தி.மு.க பொது செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு உட்பட பலர் பங்கேற்க உள்ளனர்.
ஆந்திராவைப் போல தமிழகத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் என சிலர் கூறுகின்றனர். அது பொறுத்தமானதாக இருக்காது என்பதால் அக்கருத்தை ஏற்க முடியாது.
தமிழகத்தில் தமிழ் ஆட்சிமொழியாக உள்ளதாக முதல்வர் கூறுவது கேலிக்கூத்து. விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மிக பத்திரமாக நல்ல முறையில் இருக்கிறார். தக்க சமயத்தில் அவர் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வார்' என்றார் பழ.நெடுமாறன்.