சேது மாற்றுப் பாதை: பிப். 23க்குள் பதிலளிக்க மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
டெல்லி: ராமர் பாலத்தை இடிக்காமல் மாற்று வழியில் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றுவது குறித்து அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 23ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக இதுகுறித்து பதிலளிக்க 18 மாத கால அவகாசம் அளிக்க வேண்டும் என்று கோரி மத்திய அரசு உச்சநீதிமன்றத்திடம் கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ரூ.2,200 கோடி செலவிலான சேது சமுத்திர திட்டப் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளன. இத் திட்டத்துக்காக ராமர் பாலத்தை இடிக்க அதிமுக, பாஜக மற்றும் இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
மேலும் இந்தத் திட்டத்தை எதிர்த்து ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதையடுத்து இத் திட்டத்தை மாற்று பாதையில் நிறைவேற்றுவது குறித்து பரிசீலிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து இது குறித்து ஆய்வு செய்வதற்காக டாக்டர் ஆர்.கே.பச்சோரி தலைமையில் வல்லுனர் குழு ஒன்றை மத்திய அரசு அமைத்தது.
இந் நிலையில் இந்த வழக்கில் புதிய பிரமாண பத்திரத்தை (அபிடவிட் மனு) மத்திய அரசு தாக்கல் செய்தது.
அதில், ராமர் பாலத்தை இடிக்காமல் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றுவதற்கான மாற்றுப் பாதையை கண்டறிய மேலும் 18 மாதங்கள் கால அவகாசம் அளிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதிகள் ரவீந்திரன், வரியவா ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் சாமி ஆஜராகி, கடந்த ஆண்டு இதுகுறித்து பதிலளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் இதுவரை மத்திய அரசு பதிலளிக்கவில்லை என்று குற்றம் சாட்டினார்.
அதற்கு மத்திய அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே, இந்தத் திட்டத்தின் மாற்றுப் பாதை குறித்து ஆராய்ந்து பதிலளிக்க 18 மாத கால அவகாசம் தேவைப்படும் என்றார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், அடுத்த ஆண்டு பிப்ரவரி 23ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.