கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொன்று பிணத்தை ஆந்திராவில் வீசிய மனைவி
சென்னை: கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொலை செய்த பெண், கணவரின் பிணத்தை ஆந்திராவுக்குக் கொண்டு போய் வீசிய கொடு்மை நடந்துள்ளது.
சென்னை ஆவடி பஜார் தெருவை சேர்ந்தவர் அசோக்குமார் (25). இவர் அமைந்தகரையில் உள்ள சைக்கிள் கடையில் கலெக்ஷன் ஏஜெண்டாக வேலைபார்த்து வந்தார். இவரது மனைவி ரேகா திருமணம் முடிந்து 1 வருடம் ஆகிறது.
சம்பவத்தன்று வேலைக்கு சென்ற அசோக்குமார் வீடு திரும்பவில்லை என்று ரேகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். பின்னர் தனது அண்ணன் திருமணத்திற்கு செல்வதாக கூறி ராஜஸ்தான் போய் விட்டார்.
இதுகுறித்து விசாரணை நடத்த கமிஷனர் ஜாங்கிட் உத்தரவிட்டார். அதன் பேரில் தனிப்படை அமைத்து விசாரணை நடந்தது. விசாரணையின்போது ரேகாவின் நடத்தை குறித்து சந்தேகமான முறையில் பல்வேறு நபர்களும் போலீஸாரிடம் தெரிவித்தனர். இதையடுத்து போலீஸாரின் சந்தேகப் பார்வை ரேகா பக்கம் திரும்பியது.
ராஜஸ்தானிலிருந்து வருமாறு ரேகாவுக்கு அழைப்பு விடுத்தனர். அவரும் வந்தார். அவரிடம் விசாரித்தபோது, வேலைக்கு சென்ற கணவர் வீட்டிற்கு வரவில்லை, எனக்கு அவரை தவிர வேறு ஆண்களுடன் பழக்கமில்லை என்று கூறினார். போலீஸார் கேட்ட அனைத்துக் கேள்விகளுக்கும் இதையே பதிலாக கூறி வந்தார்.
இதையடுத்து அவரை விட்டு விட்டனர் போலீஸார். இருப்பினும், அவரது செல்போன் தொடர்புகளைக் கண்காணித்து வந்தனர்.
அப்போது ஆற்காட்டைச் சேர்ந்த ஒரு நபருடன் ரேகா அடிக்கடி பேசியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ரேகாவை முறைப்படி விசாரித்தனர். இதில் உண்மையைக் கக்கினார் ரேகா.
ரேகாவுக்கு கள்ளக்காதல் இருந்துள்ளது. இருவரும் சேர்ந்து அசோக்குமாரைக் கொலை செய்துள்ளனர் பின்னர் பொய்யான புகாரை போலீஸாரிடம் கொடுத்துள்ளனர். கொல்லப்பட்ட அசோக்குமாரின் உடலை, ஆந்திராவுக்கு காரில் எடுத்துச் சென்று காட்டுப் பகுதியில் வீசி விட்டு வந்துள்ளனர்.
இதையடுத்து டி.டி.நல்லூர் என்ற இடத்திற்கு விரைந்த போலீஸார் அங்கு வீசப்பட்டிருந்த அசோக்குமாரின் அழுகிய உடலை மீட்டனர்.
இதைத் தொடர்ந்து ரேகாவை இன்று கைது செய்தனர். அவரது கள்ளக்காதலனான ஆற்காட்டைச் சேர்ந்த ஆசிம், அவரது கூட்டாளிகளான வினோத், பாஷா ஆகியோரை தேடி வருகின்றனர்.