ஹாக்கி இந்தியா அமைப்பின் தலைவர் ஏ.கே.மட்டூ விலகல்
டெல்லி: இந்திய ஹாக்கி உலகை பெரும் நெருக்கடிக்குள்ளாக்கி சர்ச்சையின் தொடர்ச்சியாக ஹாக்கி இந்தியா அமைப்பின் தலைவர் பதவியிலிருந்து ஏ.கே.மட்டூ விலகி விட்டார்.
மேலும், அமைப்பின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் அவர் தன்னை விடுவித்துக் கொண்டுள்ளார்.
இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் சுரேஷ் கல்மாடிக்கு தனது ராஜினாமா கடிதத்தை அவர் அனுப்பி வைத்துள்ளார். மேலும், விளையாட்டு நிர்வாகத்திலிருந்து தான் ஓய்வு பெறுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து மட்டூ கூறுகையில், கல்மாடிக்கு எனது ராஜினாமாவை அனுப்பி விட்டேன். விளையாட்டு நிர்வாகத்திலிருந்து முற்றாக ஓய்வு பெற விரும்புகிறேன். நாற்பது ஆண்டுகள் நான் பணியாற்றி விட்டேன். எனவே ஓய்வுக்கு இதுவே சரியான தருணமாக கருதுகிறேன் என்றார்.
ஹாக்கி இந்தியா தலைவர் பதவி மட்டுமல்லாமல், இந்திய ஒலிம்பிக் சங்க பொருளாளர், 2010 காமன்வெல்த் போட்டிகளுக்கான ஒருங்கிணைப்புக் குழு ஆகியவற்றிலும் பொறுப்பு வகித்து வருகிறார் மட்டூ என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் மட்டூவுக்கு எதிராக பல்வேறு புகார்களை அடுக்கி போர்க்கொடி உயர்த்தினர் இந்திய ஹாக்கி வீரர்கள். இதனால் பெரும் பரபரப்பு ஏர்பட்டது. ஊதிய உயர்வு உள்ளிட்டவை தொடர்பாக ஏற்பட்ட இந்தப் பிரச்சினையால் இந்திய ஹாக்கி ரசிகர்கள் பெரும் கவலை அடைந்தனர்.
ஹாக்கி வீரர்களை சமாதானப்படுத்த கல்மாடி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். இந்த நிலையில்தான் பதவி விலகியுள்ளார் மட்டூ.
பிப்ரவரி 7ம் தேதி ஹாக்கி இந்தியாவின் புதிய கமிட்டிக்கான தேர்தல் நடைபெறுகிறது. அன்றுடன் ஓய்வு பெறுவார் மட்டூ.












Click it and Unblock the Notifications