ஆளில்லா உளவு விமானம் விழுந்து நொறுங்கியதா?
சமீபகாலத்தில் விபத்துக்குள்ளாகியுள்ள இரண்டாவது விமானம் இது.
ஆனால், அந்த விமானம் விபத்துக்குளாகவில்லை என்றும், அது பாராசூட் மூலம் தரையிறங்கியபோது கிளம்பிய தூசியை வைத்து அது விழுந்துவிட்டதாக மக்கள் நினைத்துவிட்டதாக பாதுகாப்புத்துறை கூறியுள்ளது.
போர்க் காலங்களில் எதிரி நாட்டு பரப்பை உளவு பார்க்க பயன்படும் 'நிஷாந்த்' என்ற இந்த ஆளில்லா உளவு விமானத்தை இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) தயாரித்து, சோதனையிட்டு வருகிறது.
நேற்று மாலை கோலார் வீராபுரா பகுத்யில் உள்ள ஆராய்ச்சி மையத்தில் இருந்து சோதனைரீதியாகக் கிளம்பிய இந்த விமானம் பங்காருப்பேட்டை அருகே உள்ள அப்பகிரி ஹொசஹள்ளி என்ற கிராமத்தின் மீது பறந்தபோது திடீரென ஒரு வயலில் விழுந்து நொறுங்கியது.
இதுகுறித்து உடனடியாக பங்காருபேட்டை போலீசுக்கு கிராம மக்கள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் அதைக் கைப்பற்றி டிஆர்டிஓ அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
ஆனால், விமானம் விபத்துக்குளாகவில்லை என்றும், அது பாராசூட் மூலம் தரையிறங்கியபோது வயலில் வேகமாக தரையைத் தொட்டதால் தூசி கிளம்பியதாகவும், அதைத் தான் மக்கள் விழுந்து நொறுங்கிவிட்டதாக கருதிவிட்டதாகவும் டிஆர்டிஓ கூறியுள்ளது.
அது ஏன் கிளம்பிய இடமான டிஆர்டிஓ ஆராய்ச்சி மையத்தில் தரையிறங்காமல் ஏதோ ஒரு வயலில் போய் 'தரையிறங்கியது' என்று தெரியவில்லை.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஒரு ஆளில்லா உளவு விமானம் ஒசூர் அருகே தென்னந்தோப்பில் விழுந்து நொறுங்கியது நினைவுகூறத்தக்கது.
ஒரு ஆளில்லா உளவு விமானத்தின் விலை ரூ. 2.8 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.